search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சி காமாட்சி அம்மனின் தவக்கோலம்
    X

    காஞ்சி காமாட்சி அம்மனின் தவக்கோலம்

    காமாட்சி ஆலயத்தில் எல்லோருடைய கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்திழுப்பது காமாட்சியின் செப்புத்திருமேனியாகும்.
    காமாட்சி ஆலயத்தில் எல்லோருடைய கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்திழுப்பது தபஸ் காமாட்சியின் செப்புத்திருமேனியாகும். பீடத்திலிருந்து ஏறத்தாழ மூன்றடிக்குமேல் உயர்ந்திருக்கும் இத்திருமேனி தமிழ்நாட்டின் சிற்பக் கலைக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    அன்னையின் எழில்மிகு நெற்றியில் திரிபுண்டரமான பிறைநிலவாய் திருநீறு. கார்மேகம் வியக்கின்ற கார்குழல் அவிழ்ந்து முதுகிலும், தோள்களிலும் கருநுரை வெள்ளமாய்ப் பரவிக்கிடக்கிறது.

    வலக்கரம் உயர்ந்து, சிரத்தின் உச்சியில் ருத்திராட்ச மாலையை விரல்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இடக்கரம் மார்பு ஊடாக மடிந்து, விரல்களில் சின்முத்திரையுடன் விளங்குகிறது.

    இடக்கால் பெருவிரல் ஊன்ற பஞ்சாக்னியின் வெஞ்சுடர் முனையில் நிற்கிறது. வலக்கால் முன்புறமாக மேல் நோக்கி மடங்கியிருக்கிறது. கண்மலர்கள் குவிந்துள்ளன. திருவாய்மலர் பஞ்சாட்சரத் திருப்பெயரை உரைத்துக் கொண்டிருக்கிறது. மனமோ யோக தியானத்தில் தவழ்கிறது.

    அன்னை தவமியற்றும் அற்புதத்தை அழகோவியமாக காட்டுகிறது. இந்தப் பஞ்சலோகத் திருமேனி. இந்தக் கோலம் ஒரு சில ஆலயங்களில் தூண்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், செப்புச் சிலை வடிவத்தில் இருப்பது இங்குமட்டும்தான். இத்திருமேனி ஏறத்தாழ 15-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன. ஒன்று அன்னையின் ஏவல் கேட்டு நிற்கும் கிங்கரியின் திருவுருவம், மற்றொன்று கிராம தேவதை.
    Next Story
    ×