search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவூடல் திருவிழாவை முன்னிட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்தபோது எடுத்த படம்.
    X
    திருவூடல் திருவிழாவை முன்னிட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்தபோது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கோவில் தல வரலாறுபடி, பிருங்கி முனிவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அண்ணாமலையாரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது வண்டு உருவில் அண்ணாமலையாரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். அதனால் அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் மனித வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு, பிறகு கூடல் ஏற்படுவதும் வாழ்வின் ஒரு நிலை என்பதை பக்தர்களுக்கு விளக்குவதும் திருவூடலாகும்.

    அதன்படி திருவூடல் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.


    அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்திக்கு வடை, முருக்கு, அதிரசம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

    அதைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சாமி, அம்மன் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார்.

    அண்ணாமலையார் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும்போது சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தின் அருகே மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.

    விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது.
    Next Story
    ×