search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    என்ன நினைத்தாலும் சாய்பாபாவுக்கு தெரியும்
    X

    என்ன நினைத்தாலும் சாய்பாபாவுக்கு தெரியும்

    சீரடியில் சாய்பாபாவின் வாழ்க்கையில் நடத்த சில முக்கியமான நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    சீரடியில் சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலித்த துவாரகமாயி மசூதி மிகவும் புனிதமான இடமாகும். அங்கு ஏராளமானவர்கள் பாபாவை நேரில் தரிசனம் செய்து ஆசி பெற்றுள்ளனர். அவர்கள் எல்லாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். புண்ணியம் செய்தவர்கள்.

    சாய்பாபா பெரும்பாலான நேரம் அந்த மசூதியிலேயே இருந்ததால், அங்கு அவரது அருள் அலை நிரம்பி வழிந்தது. இப்போதும் அருள் அதிர்வுகள் உள்ளது. அந்த மசூதிக்குள் காலடி எடுத்து வைத்த ஒவ்வொருவரும் இதை அனுபவப்பூர்வமாக நன்கு உணர்ந்தனர்.

    பாபாவை பார்க்க நாட்டின் நாலா திசையில் இருந்தும் வந்தவர்கள், துவாரகமாயிக்குள் நுழைந்ததும் தங்களையே மறந்தனர். நிறைய பேர் தாங்கள் யார், தங்களுக்கும் பாபாவுக்கும் உள்ள தொடர்பு எத்தகைய மகத்துவமானது என்ற தெளிவைப் பெற்றனர். சமீப காலமாக சீரடி தலத்துக்கு செல்பவர்கள், அவரது மகாசமாதி அமைந்துள்ள அரங்கில் மட்டுமே மனம் குளிர வழிபடுகிறார்கள். துவாரகமாயி உள்ளிட்ட மற்ற இடங்களை ஏதோ சுற்றுலா இடத்தைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். அது தவறு.

    துவாரகமாயி மசூதி நமக்கு ஆத்ம ஞானத்தை தரும் அருமையான இடமாகும். அதனுள் காலடி எடுத்து வைத்ததுமே பலரது தோஷம் பறந்தோடி இருக்கிறது. பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி, உலக மக்களுக்கு கண்கண்ட தெய்வமாகத் திகழும் சாய்பாபா, தன்னை நாடி வந்தவர்களை இந்த இடத்துக்குள் “நாடி” பிடித்து பார்த்த சம்பவம் பல தடவை உள்ளது.

    துவாரகமாயிக்குள் வருபவர் யார்? அவர் எதற்காக வந்துள்ளார்? அவர் மனதில் என்ன நினைக்கிறார்? அவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பன போன்ற அனைத்தையும் சாய்பாபா அறிந்திருந்தார். பக்தர்கள் பலர் பாபாவை ஏமாற்ற முயற்சி செய்தது உண்டு. ஆனால் பாபாவிடம், அவர்கள் முயற்சி தோற்றுப் போனது. தன்னிடம் வந்தவர் எதற்காக வந்துள்ளார் என்பன அனைத்தையும் பாபா புட்டு, புட்டு வைத்து விடுவார். இந்த அற்புதத்தை துவாரகமாயிக்குள் அவர் தினம், தினம் நடத்தி காட்டினார்.

    உதாரணத்துக்கு சில...

    சாய்பாபாவின் மனதில் இடம் பிடித்த பக்தர்களில் நானா சாந்தோர்கர் என்பவரும் ஒருவர். அவருக்கு வருவாய் துறையில் பணியாற்றிய வி.எச்.தாகுர் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. தாகுரை சீரடிக்கு வந்து பாபாவை தரிசித்து ஆசி பெறுமாறு நானா சாந்தோர்கர் அடிக்கடி அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தாகுருக்கு அதற்கான சூழ்நிலை அமையாமல் இருந்தது.

    ஒரு தடவை அவர் பெல்காம் நகருக்கு வருவாய் துறை பணி நிமித்தமாக சென்றிருந்தார். அப்போது கர்நாடகாவை சேர்ந்த முனிவர் ஒருவரை சந்தித்தார். அந்த முனிவர், “விசாரசாகரம்” என்ற நூலை தாகுருக்கு கொடுத்தார். பிறகு அவர், “ இந்த நூலைப்படி. இன்னும் சில தினங்களில் ஒரு அவதாரப் புருஷரை சந்திப்பாய்.  அப்போது உனக்கு எல்லாம் புரியும்” என்றார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு தாகுர் பெல்காமில் இருந்து ஜின்னர் எனும் நகருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். ஜின்னருக்கு செல்ல சரியான வாகன வசதி இல்லாத நேரம் அது. எனவே எருமை மாட்டில் ஏறி அவர் அந்த ஊருக்குச் சென்றார். சில நாட்களில் அவர் அந்த ஊரில் இருந்து பதவி உயர்வு பெற்று கல்யாண் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு பாபாவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. மறுநாளே சீரடிக்கு புறப்பட்டு விட்டார்.

    நானா சாந்தோர்கரின் நண்பர் என்பதால் அவர் பாபாவிடம் உடனடியாக ஆசி பெற துவாரகமாயில் இருந்தவர்கள் உதவி செய்தனர். மசூதிக்குள் நுழைந்து பாபாவை கண்ட அடுத்த வினாடி தாகுர் உடல் சிலிர்த்தது. கடவுளையே நேரில் பார்த்து விட்டது போல தாகுர் மனம் குதூகலம் அடைந்தது.

    பேச வார்த்தை எதுவும் வரவில்லை. கண்ணீர் மல்க அப்படியே சாஷ்டங்கமாக பாபா காலில் விழுந்து தாகுர் வணங்கி எழுந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்த பாபா, “கன்னட தேசத்து முனிவரிடம் நீ எளிதில் உபதேசம் பெற்று விடலாம்.

    எருமை மாடு மீது ஏறி ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு சுலபமாக வந்து விடலாம். ஆனால் ஆன்மிகத்துக்குள் அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அதற்கு நீ இன்னும் பல கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டும்” என்றார்.

    பாபா சொல்ல... சொல்ல... தாகுருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தரை விலகி ஓடுவது போல பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபாவை அவர் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார். அப்படி இருக்கும் போது கன்னட தேசத்துக்கு முனிவரை சந்தித்தது பற்றியும், எருமையில் சவாரி செய்தது பற்றியும் மிகத் துல்லியமாகச் சொல்கிறாரே என்று நினைத்து வியந்தார்.

    இவரே நாம் கண் கண்ட தெய்வம் என்று ஆனந்த கண்ணீர் வடித்தார். பாபா கால்களில் மீண்டும் விழுந்த அவர், “இன்று முதல் உங்கள் திருவடிகளில் இருப்பேன்” என்று கூறி ஆசிப் பெற்றார். அதன்பிறகு பாபாவின் சிறப்பான பக்தர்களில் ஒருவராகத் தாகுர் திகழ்ந்தார்.

    நானாவின் மற்றொரு நண்பருக்கும் இதே போன்று அதிசயத்தை சாய்பாபா நிகழ்த்தி காட்டினார். நானாவின் அந்த நண்பர் பதஞ்சலியின் யோக சாஸ்திரம் உள்பட பல்வேறு வகை நூல்களைக் கற்றுத்தேர்ந்தவர்.

    ஆனால் அவருக்கு தியானம் மட்டும் கை கூடவில்லை. எவ்வளவோ முயன்றும் அவரால் ஆழ்நிலை தியானத்தில் வெற்றி பெற முடியவில்லை. சீரடி சாய்பாபாவை சந்தித்தால் அவர் தன் தியானப் பயிற்சிக்கு உதவி செய்வார் என்று நம்பினார்.

    அந்த ஆசையுடன் அவர் நானாவை அழைத்துக் கொண்டு சீரடிக்கு வந்தார். அவர் துவாரக மாயி மசூதிக்குள் நுழைந்த போது, பாபா ரொட்டித் துண்டுகளை வெங்காயம் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அந்த காட்சியைக் கண்டதும் நானாவின் நண்பருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருந்த அவருக்கு சாய்பாபா சாதாரணமாகத் தெரிந்தார். பாபா மீது அவருக்கு நம்பிக்கையோ, மரியாதையோ வரவில்லை.

    மக்கிப் போன ரொட்டி துண்டுகளையும், வெங்காயத்தையும் தின்று கொண்டிருக்கும் இவர் எப்படி மகானாக இருக்க முடியும்? நாம் நினைத்த தியானப் பயிற்சியை இவரால் நிச்சயம் தர இயலாது” என்று மனதுக்குள் நினைத்து கொண்டார். அடுத்த வினாடி அவரை பாபா தலையை உயர்த்தி பார்த்தார். பிறகு சிரித்தப்படி மீதம் இருந்த ரொட்டித் துண்டுகளையும் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட்டார்.

    தண்ணீர் குடித்து விட்டு திரும்பிய அவர், “நானா சிலருக்கு வெங்காயம் என்றால் சாதாரணமாகத் தெரிகிறது. வெங்காயம் சாப்பிடுபவர்களை ஏளனத்தோடு பார்க்கிறார்கள். பச்சை வெங்காயத்தை எல்லாராலும் தின்று விட முடியாது. யார் ஒருவருக்கு சிறப்பான ஜீரண சக்தி உள்ளதோ அவரால்தான் வெங்காயம் சாப்பிட முடியும்.

    அது போலத்தான் தியானப் பயிற்சியும். யார் ஒருவரால் வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் ஜீரணித்துக் கொள்ள முடிகிறதோ, அவரால் மட்டுமே மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். மனம் ஒரு முகமானால்தான் ஆழ் தியானம் செய்யும் நிலையை எட்ட முடியும்” என்றார்.

    பாபா இவ்வாறு சொல்லி முடித்ததும் நானாவின் அந்த நண்பர் அதிர்ச்சியில் உறைந்து போனார். சீரடிக்கு வரும் போது நாம் மனதில் என்ன நினைத்துக் கொண்டு வந்தோமோ, அதை ஒரு வெங்காயத்தை உதாரணமாக வைத்து சொல்லிவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டார்.

    நாம் மனதில் நினைத்ததை துல்லியமாக சொல்கிறார் என்றால் அவர் கடவுளாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும் என்றுஅவர் உள் மனம் படபடப்புடன் துடித்தது. அதோடு பாபாவை பற்றி தவறுதலாக வேறு மாதிரி நினைத்து விட்டோமே என்று மனம் பதைபதைத்தது.

    பாபா காலில் விழுந்து அவர் மன்னிப்புக் கோரினார். அவரை தூக்கி மன்னித்து பாபா ஆசீர்வாதம் செய்தார். அதோடு அவருக்கு தம் கை நிறைய உதியையும் எடுத்துக் கொடுத்தார். அப்போது அவரது கண்களுக்கு பாபா அன்னையாக காட்சி அளித்தார்.

    இப்படி துவாரகமாயிக்குள் பாபா நிகழ்த்திய மேலும் சில அற்புதங்களை அடுத்த வாரம் (வியாழக்கிழமை) பார்க்கலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    Next Story
    ×