search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மன மகிழ்வைத் தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்
    X

    மன மகிழ்வைத் தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்

    கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது.
    பரசுராமரால் உருவாக்கப்பட்ட பகுதியே இன்றைய கேரளம் என்கிறது புராணத் தகவல்கள். இதன் காரணமாகவும் கேரளத்தை இறைவனின் ஊர் என்று அழைக்கிறார்கள். கேரளத்தை உருவாக்கிய போது, பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணக் கதை கூறுகிறது. கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள்.

    இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. ஏனெனில் இந்தப் பொங்கல் திருவிழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இதே போல் 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததாக முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    சிறுமியாக வந்த அம்மன் :

    கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலம் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள்.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதன் காரணமாக தெரிவிக்கப்படும் மற்றொரு தகவலை இங்கு காணலாம்.

    பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ‘என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா?’ என்று கேட்டாள்.

    ஆனால் சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார்.

    அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவிலே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு.



    ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீ சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப் பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    பொங்கல் திருநாள் :

    கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர். கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×