search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜகோபால சுவாமி திருக்கோவில் - திருநெல்வேலி
    X

    ராஜகோபால சுவாமி திருக்கோவில் - திருநெல்வேலி

    இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் ஆதிவராகர் எழுந்தருளியுள்ளதால் இக்கோவில் ஆதிவராக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
    திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மத்தியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது, அழக மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில். தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் மாநவல்லபன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு கோபுரங்களுடனும், விமானங்களுடனும், இரண்டு திருச்சுற்றுக்களுடனும், எண்ணற்ற மண்டபங்களுடனும் காட்சி தருகிறது இந்தக் கோவில்.

    ஆலய முகப்பில் ராஜகோபுரம் மிகவும் கம்பீரமாக நிற்கிறது. இங்கு அழகே வடிவான ராஜ களை நிரம்பிய அழகிய மன்னாரும், வேதங்களுக்கு அதிபதியான வேதநாராயணரும், ஆநிரைகளின் தலைவனான கோபால சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான வேதநாராயண பெருமாள் 8 அடி உயரத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். தேவியர்கள் இருவரும் வேதவல்லி தாயார், குமுதவல்லி தாயார் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவமாதர்களான ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசும் கன்னிகளாக அருகில் வீற்றிருக்கின்றனர்.

    ஸ்ரீகோபாலன் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அர்த்த மண்டபத்தில் இருந்து காட்சி தருகிறார். இவரை உற்சவமூர்த்தி என்றும் அழைப்பர். வேதநாராயண பெருமாளுக்கு தென்திருச்சுற்றில் ஸ்ரீதேவி தனிக்கோவிலும், வடக்கு திருச்சுற்றில் பூதேவி தனிக்கோவிலும் கொண்டுள்ளனர். இவற்றை தவிர அருள்மிகு செண்பக விநாயகர் தென்பகுதியில் ஒரு சிறிய அளவில் தனி சன்னிதியில் காணப்படுகிறார். உள் திருச்சன்னிதியின் மேற்கே ஸ்ரீ பரமபதநாதர் தமது தேவிமார்களுடனும், ஸ்ரீ ஆதிவராகர் லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணமும், தசாவதார மூர்த்திகளும் காட்சி தருகின்றனர்.

    கருவறையின் மேல்தளத்தில் ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் வேறு சில ரிஷிகளுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அழியாத தாவரக்கலை வர்ணத்தால் இச்சிலைகள் மெருகேற்றப்பட்டு உள்ளன. ஐந்து நிலைகளுடன் கூடிய அன்னக்கூட ராஜகோபுரம், 5 அடுக்கு உயரத்துடன் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சுமார் 69 அடி உயரத்தில் கருவறை விமானம் அமைந்து உள்ளது.

    இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் ஆதிவராகர் எழுந்தருளியுள்ளதால் இக்கோவில் ஆதிவராக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் மலையை (சிறு குன்று) சரி செய்து இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் வர்ணகலாப திருமேனியாக கீழேயும், மேலேயும் எழுந்தருளியுள்ளார். வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே அபிஷேக மூர்த்தியாக காணப்படுகிறார். ஸ்ரீ வித்யா ராஜகோபால மூர்த்தியான இவர், மிகவும் வரப்பிரசாதியாக உள்ளார். இந்த ராஜகோபுரத்தில் தெய்வ சிலைகளை தவிர மனித உருவ வழிபாடுகளே கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோவில் கருவறை மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், உள் பிரகாரம், கருட மண்டபம், வெளி பிரகாரம், பந்தகால் மண்டபம் என்று பலவிதமான அமைப்புகளுடன் அமைந்து உள்ளது. கல்விக்கு அதிபதியான ஸ்தலமாகவும், ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும், கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் ஸ்தலமாகவும், பூமி, வாகனாதிபதி, யோக, வியாபார மற்றும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.

    இங்குள்ள தசாவதார சன்னிதிகள், ஆழ்வார் சன்னிதிகள் மிக அழகாக கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. கோவில் முழுவதும் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கண்ணை கவரும் வகையில் அமைந்து உள்ளன. ஸ்தபன மண்டபத்தில் மிகச்சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. 51 அடி உயரத்தில் கொடி மரம் மிக கம்பீரமாக அமைந்துள்ளது.

    கொடி மரத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையே கொலு மண்டபம் அமைந்து உள்ளது. கொடிமர மண்டபத்தில் திருக்கோபுரமும், கோவில் நுழைவாயிலில் ராஜகோபுரமும் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தின் ஐந்து நிலைகளிலும் விஷ்ணு புராணமும், சிவ புராணமும் கலந்து சுதையாலான இருநூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் காணப்படுகிறது. இரண்டாவது பிரதான நடையின் அருகில் தூண்களுக்கு மேலே சந்திரனை ராகு, கேது விழுங்குவது போல்(கிரகணம்) அருங்காட்சி உள்ளது. கருவறை முதல் ராஜகோபுரம் வரை ஐந்து நிலைகளில் விஷ்ணு, புருஷன், சத்தியன், அச்சுதன், அநிருத்தன் என்கிற முறையில் ஆராதனை (பஞ்சபேத விதானம்) நடைபெறுகிறது.

    கோவிலின் அமைப்பை தெரிந்து கொண்ட நாம் இனிமேல் இத்திருத்தலம் இங்கு அமைந்த வரலாற்றை பார்ப்போம்.

    கர்வம் கொண்டிருந்த பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர்கள் என்ற அசுரர்கள் வேதங்களை அபகரித்து சென்றனர். அவற்றை மீண்டும் பெற பிரம்மா, தனது தந்தையான விஷ்ணுவின் பிம்பத்தை செண்பக விநாயகருக்கு மேற்கு திசையில் வைத்து பூஜை செய்தார். மீன் வடிவெடுத்து, அசுரர்களை அழித்து விஷ்ணு வேதங்களை மீட்டு கொடுத்ததால் வேதநாராயணர் என மூவுலகிலும் புகழ் பெற்றார். வேதங்களை கற்க விரும்புபவர்கள் இத்தலத்திற்கு வந்து செண்பகாரண்யவாசியான வேதநாராயணரை வழிபட்டால் கல்வி, வேள்விகளில் வலிமை பெற்று திகழலாம் என புராணம் கூறுகிறது.

    தாமிரபரணியின் தென்திசை பகுதியில் மணற்படைவீடு என்ற பகுதியினை உக்கிர பாண்டியன் ஆண்டு வந்தான். அவனது மகனான சீவலனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத நிலையில் புத்திர பாக்கியம் வேண்டி யாத்திரை சென்றான். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் பூஜித்த கோபாலனது விக்கிரகத்தை கங்கையாற்றில் விட்டு சென்றதாகவும், அதை எடுத்து வந்து செண்பகாரண்யத்தில் பிரதிஷ்டை செய்தால் சீவலனது விருப்பம் நிறைவேறும் என்று கேள்விப்பட்டு சீவலன் கருடன் வட்டமிடும் கங்கை கரையில் கோபாலனின் விக்கிரகத்தை கண்டெடுத்து அதை கண்வ முனிவர் ஆலோசனைப்படி வேதநாராயணர் எழுந்தருளியிருக்கும் திருமங்கை நகரான செண்பகாரண்ய ஷேத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும், இதைத்தொடர்ந்து அரசனுக்கு இரு புத்திரர்கள் பிறந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இதனால் இன்றும் பக்தர்கள் சந்தான பாக்கியத்திற்காக (குழந்தை பாக்கியம்) கோபாலசுவாமியை பிரார்த்திக்கின்றனர்.

    இக்கோவிலில் வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், பங்குனியில் பிரமோற்சவமும், வைகுண்ட ஏகாதசி, பவித்ர உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் தினந்தோறும், மாதந்தோறும் நடைபெறும் பூஜைகள், பிற வைபவங்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இக்கோவிலுக்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது வந்து வேதநாராயணரையும், அழகிய மன்னாரையும், கோபால சுவாமியையும் வழிபட்டு சென்றால் அவர்கள் வாழ்வில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    மூன்றாவது பெரிய கருவறை :

    தஞ்சை பெரிய கோவில் கருவறை தமிழகத்தில் உள்ள கோவில் கருவறைகளில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை இரண்டாவதாகவும் அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கருவறையை கொண்டதாக இத்திருத் தலம் திகழ்கிறது. இக்கோவில் துவித்தலம் (இரண்டு அடுக்கு) என்ற சிறப்பை பெற்றுள்ளது. 

    கீழே அமர்ந்த கோலத்திலும், மேலே 9 அடி உயரத்தில் நின்ற கோலத்திலும் வேதநாராயணர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கருவறையில் வீற்றிருக்கும் தேவமாதர்களான ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் சிகை அலங்காரத்தை காண கண்கோடி வேண்டும். நாராயணர் கோவிலுக்கு நான்கு வாசல்கள் என்பார்கள். அதுபோல் இக்கோவிலிலும் நான்கு வாசல்கள் உள்ளன. தட்சிணாயன, உத்தராயண வாசல்கள் உள்ளன.

    தஞ்சை பெரிய கோவில் கருவறை தமிழகத்தில் உள்ள கோவில் கருவறைகளில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை இரண்டாவதாகவும் அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கருவறையை கொண்டதாக இத்திருத் தலம் திகழ்கிறது. இக்கோவில் துவித்தலம் (இரண்டு அடுக்கு) என்ற சிறப்பை பெற்றுள்ளது. 

    கீழே அமர்ந்த கோலத்திலும், மேலே 9 அடி உயரத்தில் நின்ற கோலத்திலும் வேதநாராயணர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கருவறையில் வீற்றிருக்கும் தேவமாதர்களான ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் சிகை அலங்காரத்தை காண கண்கோடி வேண்டும். நாராயணர் கோவிலுக்கு நான்கு வாசல்கள் என்பார்கள். அதுபோல் இக்கோவிலிலும் நான்கு வாசல்கள் உள்ளன. தட்சிணாயன, உத்தராயண வாசல்கள் உள்ளன. 

    அமைவிடம் :

    திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் இந்தக் கோவில் அமைந்து உள்ளதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ரெயில், பஸ் மூலம் கோவிலுக்கு சென்று வரலாம். திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 
    Next Story
    ×