search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தோஷம் தரும் சரஸ்வதி விரத பூஜை
    X

    சந்தோஷம் தரும் சரஸ்வதி விரத பூஜை

    நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
    நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதி வழிபாட்டுக்கு முன்னதாக, வழிபாடு செய்யும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். சந்தனம் தெளித்து குங்குமம் இட வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து, குங்குமம் இடுவதும் அவசியம்.

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின், அருள் பார்வையில் படும் படியாக புத்தகங்களை வைத்து முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்ட நிவேதனங்களை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். அவல், பொரி, கடலை, பழங்களும் வைக்க வேண்டும், செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்றவை சரஸ்வதி தேவிக்கு உகந்த மலர்களாகும். இவற்றை மாலை தொடுத்து கல்வியின் அதிபதிக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

    எதற்கும் விநாயகரே முழு முதலானவர். மூலப் பரம்பொருள். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன்,

    ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்

    சஸிவர்ணம் சதுர்புஜம்!

    ப்ரசந்த வதனம் த்யாயேத் சர்வ

    விக்நோப சாந்தயே’

    என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்குதல் வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது ‘துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை தொடங்குவது நன்மை பயக்கும். பூஜையில் கலசம் வைத்தும் கலைமகளை வழிபடலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும்.

    நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே போது மானது. அம்பிகையின் அருள் பூரணமாய் அருளப்படும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை.

    விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன், பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனை அழிக்க முடியவில்லை. இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும் படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார்.

    அப்போது போரில் தோல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேளையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×