search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகையில் இருந்து தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நாகூர் தர்கா வாசலை வந்தடைந்தபோது எடுத்தபடம்.
    X
    நாகையில் இருந்து தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நாகூர் தர்கா வாசலை வந்தடைந்தபோது எடுத்தபடம்.

    நாகூர் தர்கா கந்தூரி விழாவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

    நாகூர் தர்கா கந்தூரி விழாவில் நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    நாகையை அடுத்த நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்அமீதுகாதிர்நாயகம் மறைந்த நினைவு நாள் கந்தூரி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 460-வது கந்தூரி விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சந்தனக்கூடு நாகை சர் அகமது தெருவில் இருந்து இரவு 7 மணி அளவில் தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்பட்டது. இதில் சாம்பிராணிசட்டி ரதம், செட்டிப்பல்லாக்கு, நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து சென்றன.

    நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹுசைன் தெரு, நூல்கடைத் தெரு, வெங்காயகடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் சந்தனக்கூடு பவனி வந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக்ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை அடைந்தது. சந்தனக்கூடு நாகை வீதிகளில் ஊர்வலமாக சென்ற போது வீட்டு மாடிகளில் நின்றபடியும், வீதிகளில் நின்றபடியும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று சந்தன கூட்டின் மீது பூக்களை வீசி பிரார்த்தனை செய்தனர்.



    சந்தனக்கூடு ஊர்வலம் நாகூர் மெயின்ரோட்டை வந்தடைந்ததும் அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகூர் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, மியான் தெரு, ரெயிலடி தெரு, நூல் கடைத்தெருவை அடைந்தது. பின்னர் மினரா வடப்புறத் தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளித்தெரு வழியாக ஊர்வலம் வந்தடைந்தது.

    பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன குடத்தை இறக்கியதும் கூடு மீண்டும் தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. இதையடுத்து அதிகாலை 5 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    அங்கு தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு துவா செய்து ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். விழாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன, மத பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×