search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தானத்தில் சிறந்த தானம்
    X

    தானத்தில் சிறந்த தானம்

    தானத்தின் வகைகள் பல உண்டு. தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு
    தானத்தின் வகைகள் பல உண்டு. அன்னதானம், பொருள் தானம், பணம் தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் போன்றவற்றில் ‘நீர் தானமும்’ சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

    இத்தகைய தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு:

    ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

    “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது நஸயீ-3666)

    “ஹள்ரத் ஸஃதுபின் உப்பாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் தர்மம் செய்வதை பிரியப்படுவார். எனவே, நான் அவர்களின் சார்பாக தர்மம் செய்தால் அது அவருக்கு பயனளிக்குமா?’ என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் பயன் தரும், தண்ணீரை தர்மம் செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்”.

    தண்ணீர் சிறந்த தானமாக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன? ஏன்? எதற்கு? என ஆய்வு செய்யும்போது நீரில்லாமல் உலகம் இயங்க முடியாது. இந்த கூற்று உண்மையானது!

    “உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம்” (21:30) என்பது திருமறையின் கூற்றாகும்.

    நீரில்லாமல் உயிர்கள் இல்லை, நீரில்லாமல் உலகம் இல்லை. நீரை நம்பித்தான் உயிரும், உலகமும் உருவாக் கப்பட்டிருக்கிறது.

    ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடிப்படையானது நீர் ஆதாரம். இது மனித இனத்திற்கு மட்டும் முக்கியமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது. மரம், செடி, கொடி, தாவரம், வனவிலங்கு, வீட்டு வளர்ப்புப் பிராணி, கால்நடை, ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன போன்ற அனைத்து உயிரினங்களில் ஆரம்பித்து மனித கண்களுக்கு புலப்படாத ‘ஜின் இனம்’ வரைக்கும் உயிர் வாழ நீர் ஆதாரம் அவசியம்.

    “ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

    மரணத்திற்கு பிறகும் நன்மை தரும் நீர் தானம்

    “ஒரு இறைவிசுவாசி மரணித்த பிறகும் அவரை வந்து அடையக்கூடிய நற்செயல்களில் முக்கியமானவை:

    1. கல்வி: அதை அவர் கற்றுக்கொடுத்து பரப்பவும் செய்கிறார்.

    2. நல்ல குழந்தையை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.

    3) ஒரு புத்தகத்தை அவர் வாரிசு பொருளாக விட்டுச் சென்றிருக்கிறார்.

    4) ஒரு பள்ளிவாசலை அவர் கட்டியுள்ளார்.

    5) வழிப்போக்கருக்காக ஒரு தங்குமிடத்தைக் கட்டியுள்ளார்.

    6) ஓடக்கூடிய ஒரு நீர் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

    7) தமது செல்வத்திலிருந்து, ஆரோக்கியமாக வாழும் போது தர்மம் செய்திருக்கிறார்.

    இவை அனைத்தும் அவரின் மரணத்திற்கு பிறகும் அவரை வந்தடையும் நன்மை பயக்கும் நற்செயல்களாக திகழ்கின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா)

    ஒருவர் தமது மரணத்திற்கு பின்பும் தமக்கு நன்மை வந்து அடைய வேண்டும் என நினைத்தால், அதிகமாக நீர் தானங்களை நிறைவேற்றுவதுடன், நிரந்தரமான நீர் தேக்கங்களையோ அல்லது நீர் தொட்டிகளையோ அல்லது நீர் நிலைகளையோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    வாயில்லாத ஜீவனும், நீர் தானமும்

    “ஒரு மனிதர் பாதையில் கடந்து செல்லும்போது அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அருகிலுள்ள ஒரு கிணற்றில் இறங்கி அதன் நீரை பருகி மேலே வரும்போது ஒரு நாய் தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதை காணுகிறார்.

    தமக்கு ஏற்பட்ட தாகத்தை போன்று நாய்க்கும் ஏற்பட்டிருப்பதாக தனக்குள் பேசிக்கொள்கிறார். பிறகு கிணற்றில் இறங்கி தமது காலணியை கிணற்றில் முக்கி தண்ணீரை நிரப்பி காலணியை தமது வாயால் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்து நாய்க்கு நீர் புகட்டுகிறார். இதனைக் கண்ட இறைவன் அவரை நன்றி பாராட்டி அவரின் பாவத்தை மன்னித்தான்.

    இதைக்கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே, உயிரினங்கள் மீது கருணை காட்டுவதாலுமா நற்கூலி கிடைக்கும்?’ என வினவினார்கள். ‘ஆம், ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதாலும் நற்கூலி கிடைக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி-2363; முஸ்லிம்- 2244)

    வாயில்லாத ஜீவனுக்கு நீர் புகட்டுவதால் இறைவனே மனமுவந்து பாராட்டி பாவத்தை மன்னிக்கும்போது மனிதன் சக மனிதனுக்கு நீர் புகட்டுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? இறைவன் அதைவிட எந்தளவு பாராட்டுவான்? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) அவர் களின் முகத்தில் ஒரு காயம் இருந்தது. அது ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக இருந்தது. “உங்களின் நோய்க்கு தர்மத்தைக் கொண்டு சிகிச்சை பெறுங்கள்” என்ற நபிமொழியை அவர்கள் கேள்விப்படுகிறார்கள்.

    தர்மத்தில் சிறந்தது நீர் தர்மம். எனவே, இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) முஸ்லிம்களின் வீடுகளின் வாசலுக்கு முன் நீர் தொட்டியை அமைத்து கொடுத்தார்கள். அதிலிருந்து மக்களும், அங்கு வந்து செல்வோரும் நீரைப் பருகினார்கள். இந்த செயலால் அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நிவாரணம் கிடைத்தது.

    ஒரு மனிதர், ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் வந்து, “எனது முட்டுக்காலில் ஒரு காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் பல மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து ஆலோசனைகளை கேட்டு, மருந்திட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகியும் அது குணமாகவில்லை” என்றார்.

    அதற்கு ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்து “நீங்கள் மக்களுக்கு நீர் தேவைப்படும் இடத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்துங்கள். இவ்வாறு ஏற்பாடு செய்தால் உனது மூட்டுவலி குணமாகும்” என்றார்கள். அவரும் அவ்வாறே செய்தார். அவரின் மூட்டுவலியும் குணமாகியது (பைஹகீ).

    தர்மம் செய்வதினால் நன்மை கிடைக்கும். எனினும் தண்ணீரை தர்மம் செய்தால் நன்மைகள் மட்டுமல்ல. நமது உடலில் உள்ள பிணியும் அதனால் நீங்கி விடுகிறது.

    தண்ணீரை விட மிகச் சிறந்த தர்மம் ஏதுமில்லை. ‘தமக்கு போக மீதமுள்ள தண்ணீரை பிறருக்கு வழங்கிட வேண்டும்’ என இஸ்லாம் கூறுகிறது. தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடை. அது மக்களின் பொது சொத்து. அது ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ சொந்தமானதல்ல.

    ஒருவரின் தேவைக்கேற்ப நீரை பயன்படுத்திக் கொள்ளலாம். அனாவசியமாக அதை வீண் விரயம் செய்யக் கூடாது. தேவைக்கு மிஞ்சியதை தண்ணீரின்றி அவதிப் படும் மக்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் இறுதியான உறுதியான தீர்வு.

    மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, நெல்லை டவுன்.
    Next Story
    ×