search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மக்களுக்கு வழங்கப்படும் கடன், இறைவனுக்கு வழங்கப்படும் அழகிய கடன்
    X

    மக்களுக்கு வழங்கப்படும் கடன், இறைவனுக்கு வழங்கப்படும் அழகிய கடன்

    கடன் விஷயத்தில் இஸ்லாமிய சட்ட திட்டத்தின்படி நடந்து, மென்மையான போக்கையும், நன்மையான நடைமுறையையும் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
    கடன் எனும் வார்த்தையையும், கடன் வாழ்க்கையும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. உலகமே கடன் மயமாகிவிட்டது. கடனை நம்பித்தான் மனித வாழ்வு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கடன் வாங்கும் போது இருக்கும் சந்தோஷம், கடனை திருப்பி கொடுக்கும்போது இருப்பதில்லை. கடன் சுமை, கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    இதுகுறித்து நபித்தோழர் அபு ஸயீத் (ரலி) தெரிவிப்பதாவது:

    ஒரு நபித்தோழரின் பெயர் அபு உமாமா (ரலி). இவர் ஒரு தடவை பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘அபு உமாமாவே! தொழுகை இல்லாத நேரத்தில் பள்ளியினுள் அமர்ந்துள்ளரே, என்ன விஷயம்?’ என விசாரித்தார்.

    அதற்கு அவர் ‘இறைத்தூதரே! எனது கவலைகளும், கடன் சுமைகளும் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்தது’ என விவரித்தார்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் உமக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத்தருகிறேன்; அதை நீர் காலையிலும், மாலையிலும் ஓதிவந்தால், இறைவன் உமது கவலையை போக்கி, உமது கடனை நிறைவேற்ற வழி வகை செய்வான்’ என அரபு மொழியில் அந்த பிரார்த்தனையை கூறினார்கள்.

    அதன் பொருள்: ‘இறைவா, நான் உன்னிடம் கவலை, தூக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன்’ என்பதாகும்.

    இந்த பிரார்த்தனையை அபு உமாமா (ரலி) காலையிலும், மாலையிலும் ஓதி வந்தார். இறைவன் அவரின் கவலையையும், கடனையும் போக்கினான். (ஆதாரம் அபூதாவூத் 1330)

    கடன்பட்டவர்கள் இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்துவந்தால் கவலையும், கடன் சுமையும் தீரும்.

    இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரையில் ‘கடன் வழங்கும் திட்டம்’ என்பது மக்கள் நலத்திட்டமாக பாவிக்கிறது. மக்கள் நலன் அனைத்தும் இறைவனுக்கு ஆற்றும் அறமாகவும், இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் வணக்கமாகவும் கணிக்கப்படுகிறது. இதனால்தான், ‘மக்களுக்கு வழங்கப்படும் கடன், இறைவனுக்கு வழங்கப்படும் அழகிய கடன்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    ‘அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக்கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான்; அவருக்கு மகத்தான கூலியும் உண்டு’ (57:11).

    அல்லாஹ்வுக்கு கடன் தேவைப்படுமா?, தேவைப்படாது. ‘அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்’ என்பதன் அர்த்தம் என்ன?

    பொருளாதாரம் சம்பந்தமாக இறைவனுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கட்டளைகள் அனைத்தும், தேவையுள்ள மனிதர் களுக்கு கொடுத்து உதவுவது தான்.

    தர்மத்தை விட கடன் கொடுப்பது சிறந்தது. கடன் கொடுப்பதன் மூலம் மனித நேயம் மலருகிறது. ஒரு மனிதரின் பிரச்சினை கடன் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. தர்மம் செய்வதினால் யாசிப்பவரின் தேவை முழுமையாக நிறைவேறாது. இதனால்தான் தர்மத்தை விட கடன் சிறந்ததாக அமைந்துவிடுகிறது.

    நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் விண்வெளிப் பயணத்தின் போது, சொர்க்கத்தின் வாசலில் ‘ஒரு தர்மம் செய்தால் பத்து மடங்கு கூலி, கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு கூலி’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

    ‘ஜிப்ரயீலே! இந்த சிறப்பு ஏன்?’ என நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் ‘யாசகன் தன்னிடத்தில் உள்ளதை பிறரிடம் கேட்கிறான்; கடனாளி தேவைக்காக இல்லாததை கேட்கிறான்’ என்று விளக்கம் அளித்தார்கள்.

    கடன் வாங்குபவர் கடனை திரும்ப செலுத்திட வேண்டும் எனும் நோக்கத்தில் கடன் பெற வேண்டும். ஏமாற்றும் நோக்கத்திலோ, பாதி செலுத்தி விட்டு மீதியை ஏமாற்ற வேண்டும் நோக்கத்தில் கடன் பெறக்கூடாது. கடன் வாங்கும்போது நடந்து கொள்வதை விட சிறந்த முறையில் கடனை திருப்பிக் கொடுக்கும்போது நடந்து கொள்ள வேண்டும்.

    இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

    ‘எவன் மக்களின் பணத்தை திருப்பி செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ, அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச்செலுத்துவான். எவன் திருப்பிச்செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), புகாரி:2387)

    ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது ‘இறைவா, பாவத்திலிருந்தும், கடனிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்’ என்று கூறினார்கள்.

    (இதைசெவியுற்ற) ஒருவர் நபிகளிடம் ‘தங்கள் கடன் பெறுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணமென்ன?’ என வினவினார்.

    ‘மனிதன் கடன் பெறும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்’ என நபி அவர்கள் பதிலளித்தார்கள். (ஆயிஷா (ரலி) புகாரி: 2397)

    ‘எவரொருவர் ஒரு கடனாளிக்கு கால அவகாசம் கொடுத்து எதிர்பார்க்கிறாரோ அல்லது அவரை விட்டு அதனை தள்ளுபடி செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருவான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்’. (அறிவிப்பாளர் : கஃப்பின் உமர் (ரலி).

    “ஒருவர் இறந்த பிறகு அவர் மண்ணறையில் அவர் செய்த நன்மை குறித்து இறைவன் விசாரிக்கும்போது, ‘அவர் கடன் கொடுத்த பணக்காரர்களுக்கு கால அவகாசம் கொடுப்பார், ஏழைகளுக்கு கடனை தள்ளுபடி செய்வார்’ என்பதை தெரிவித்த உடன், அவரின் இந்த செயலைக் கண்டு அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னித்துவிட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    கொடுத்த கடனுக்கு, கடனை விடவும் கூடுதலாக வாங்குவது வட்டி ஆகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. கடன் விஷயத்தில் இஸ்லாமிய சட்ட திட்டத்தின்படி நடந்து, மென்மையான போக்கையும், நன்மையான நடைமுறையையும் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

    மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    Next Story
    ×