search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷம் போக்கும் 108 சிவாலயம்
    X

    தோஷம் போக்கும் 108 சிவாலயம்

    108 சிவாலயம் தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.
    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது. மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த, அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

    ராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.

    அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.



    சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் ‘எதற்காக சிரித்தாய்?’ என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ‘ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது’ என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.

    சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    Next Story
    ×