search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்து துன்பங்களையும் போக்கும் சனிக்கிழமை வழிபாடு
    X

    அனைத்து துன்பங்களையும் போக்கும் சனிக்கிழமை வழிபாடு

    புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபடலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார். ‘வேங்’ என்றால் ‘பாவம்’. ‘கடா’ என்றால் ‘தீர்த்து வைக்கும் சக்தியுள்ளது’ என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு ‘வேங்கடாச்சலம்’ என்ற பெயர் வந்தது. வேங்கடத்தின் கடவுளாகிய சீனிவாசனுக்கு ‘வேங்கடேஷ்வரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

    தமிழ் மாதங்களில் 6-வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது காலம், காலமாக வழக்கத்தில் உள்ளது.
    ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். ஆக 20 வாசம் என்பது இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்று அர்த்தமாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் (பித்ருக்கள்) சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார். புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்வது மிக, மிக நல்லது. அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் இன்னும் விசேஷமாகும்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாது மற்றும் மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×