search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு பறந்த பிரபல இயக்குனர்
    X

    வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு பறந்த பிரபல இயக்குனர்

    வாய்ப்புகள் சரியாக அமையாததால் பிரபல இயக்குனர் ஒருவர் வெளிநாடு பறந்து போயுள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்..
    வெளிநாட்டில் பல லட்சம் சம்பாத்தியத்தில் வேலை பார்த்து வந்த ‘பெண் கடவுள்’ இயக்குனர், சினிமா ஆசையில் அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு கோலிவுட்டுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனருக்கு இவர் இயக்கிய குறும்படத்தையே பெரிய படமாக இயக்கும் வாய்ப்பு அமைந்தது.

    மேலைநாட்டு உணவுப் பொருளை தலைப்பாக கொண்டு உருவான அந்த படம் இயக்குனருக்கு பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தென் தமிழகத்தில் விரும்பி ருசிக்கும் குளிர்பானத்தின் பெயரை தலைப்பாக வைத்து இவர் எடுத்த படமும் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

    தனது படங்கள் தொடர் வெற்றியைக் குவித்து வந்ததில் இயக்குனருக்கு தலைகால் புரியவில்லை. தான் வளர்ந்த குறும்படத்தை வளர்த்துவிட நினைத்த இயக்குனர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பெயரில் கையை சுட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இவர் எடுத்த மூன்றெழுத்து படமும் பெரியளவில் ஓடவில்லை.

    இந்த படத்தில் தயாரிப்பாளர்களை பற்றி தவறான விமர்சனம் வைத்ததால், இவரை வைத்து படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது முன்வருவதில்லையாம். சொந்த தயாரிப்பில் களமிறங்கலாம் என்று நினைத்தால் அதற்கும் கையில் பணமில்லாமல் போய்விட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இயக்குனர் தனிமையில் இருப்பதற்காக வெளிநாட்டுக்கு பறந்து போயிருக்கிறாராம்.

    அங்கு தனிமையில் அமர்ந்து ஒரு வலுவான கதையை உருவாக்கப் போகிறாராம். இனிமேல், தாய்நாட்டுக்கு திரும்புவது என்றால் வலுவான ஒரு கதையுடன்தான் திரும்புவேன் என்ற லட்சியத்தோடு சென்றிருக்கிறாராம். இயக்குனர் திரும்புவாரா? இல்லையென்றால், அங்கேயே செட்டிலாகிவிடுவாரா? என்பது பிறகுதான் தெரியவரும். 
    Next Story
    ×