search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Party Leaders"

    சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #Adithanar
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இதழியல் துறையின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக்கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசியல், இதழியல் மற்றும் தமிழர் நலனுக்கு ஆதித்தனார் ஆற்றிய பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக இந்த அறிவிப்பு அமையும்.

    பென்னிகுயிக், காலிங்கராயர், ம.பொ.சிவஞானம் ஆகியோரின் பிறந்தநாட்கள் அரசு விழாக்களாகக்கொண்டாடப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

    பெரும்பிடுகு முத்தரையருக்கு மணி மண்டபம் வரவேற்கத்தக்கது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு அவர் பெயரைச்சூட்ட வேண்டும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஏ.டி.பன்னீர்செல்வம், ஆழியாறு அணைத் திட்டத்தின் மூலவர் பழனிசாமி கவுண்டர் ஆகியோருக்கு மணிமண்டபம், அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் அரசு விழாவாக நடத்தப்படும், கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு நூலகமும் அமைக்கப்படும் போன்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    இரட்டைமலை சீனிவாசனாருக்கு மணிமண்டபம், அல்லாள இளையநாயகருக்கு குவிமாடத்துடன் திருவுருவச்சிலை, ஒண்டிவீரனின் மணிமண்டபம் புதுப்பிக்கப்படும் ஆகிய அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்மொழி மற்றும் தமிழ் இனம் மீது தீவிர பற்றுக்கொண்ட சி.பா.ஆதித்தனார், பொது வாழ்விலும் தனது முத்திரையை பதித்தவர். மிகச்சிறந்த கல்வியாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், பண்பாளர் என பன்முகம் கொண்டவர். காலம் தாழ்ந்து தமிழக அரசால் எடுக்கப்பட்ட முடிவாயினும் பாராட்டுக்குரியது, போற்றி வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு, தமிழக அரசு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்ப்பதோடு அவர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் ம.பொ.சி.க்கு அரசு விழா எடுக்க முனைந்திருப்பது அதீத மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

    சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இட்லி இனியவன், மக்கள் உரிமை கழக முதன்மை செயலாளர் இனியன் ஜான் ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியும் வரவேற்று உள்ளது. #Adithanar
    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யாமல் வைக்கப்பட்டிருந்த ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டதால், அவர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கால் இத்தகைய கொடூரம் நடந்தேறி இருக்கிறது.

    இது போன்று அவர்கள் உயிரோடு விளையாடும் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

    பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி. கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடையவும், குழந்தைப் பேறு எவ்வித குறைபாடும் இன்றி நடந்தேறவும், தகுந்த உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள ரத்தம் ஹெச்.ஐ.வி. மற்றும் மஞ்சள் காமாலை தொற்றுநோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், 2016-ம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.

    தவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்க வேண்டும். மிக அடிப்படையான மருத்துவ சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவ மனையில் கூலித் தொழிலாளி ஒருவரின் கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

    கர்ப்பிணிப் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்துள்ளது. மருத்துவ சேவை துறையில் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியமாக நடந்து வருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

    சாத்தூர் சம்பவத்திற்குப் பிறகாவது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மாதிரிகளை முழுமையாகச் சோதிக்கும் வசதிகள் செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த அவல நிலைக்குக் காரணமான மருத்துவ அலுவலர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘சாத்தூரில், சுகாதாரத் துறையினரின் அலட்சியப் போக்கினாலும் நிர்வாகப் பிழையினாலும் எச்.ஐ.வி வைரஸ் ரத்தம் செலுத்தப்பட்டு பாதிப்படைந்துள்ள கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.

    அப்பெண்ணிற்கு தற்காலிக நிவாரணங்களுடன், நீடித்த உதவியும், நிரந்தரப் பாதுகாப்பும் அவசியம்.

    ஏழைத்தாய்க்கு நடந்துள்ள இக்கொடூரம் குறித்து மக்களாகிய நாமும் அலட்சியப்போக்கினைக் காட்டாமல், நம் அனைவருக்குமான ஒரு அபாயக்குறியாக கருதி விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt

    ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா தற்கொலை கொண்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.#NEET2018 #Pratheeba TNStudentSuicide
    சென்னை:

    ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அநீதிகளை ஏற்படுத்தி வருகின்றன. அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராட்டங்களுக்கான வியூகங்களை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை கேட்டுக்கொள்கிறேன்.

    ‘நீட்’ தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது நெஞ்சத்தை பிழிகிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் கதிதான் என்ன? ‘நீட்’ தேர்வால் தமிழ்நாட்டுக்கு 1,450 இடங்கள் பறிபோய்விட்டது. இதனை பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை. இதற்கொரு முடிவு கண்டாக வேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து மாாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘நீட்’ தேர்வு ஏழைகளின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிப்பதற்கான கருவியாக மாறியுள்ளது.

    ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் பிரதீபா இன்னுயிரை மாய்த்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கல்வியை தரமானதாக மேலும் முன்னேற்றி ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் அளவுக்கு மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சியளிக்கவேண்டும். மாணவர்களும் கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாக எதிர்காலத்தை எதிர்கொள்ளவேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கனவு ஈடேறாத துக்கத்தில் மாணவி பிரதீபா தற்கொலை செய்துள்ளார். ‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் அனிதாவின் உயிர் காவுக்கொள்ளப்பட்டது. இப்போது பிரதீபாவை அது பலி வாங்கியிருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சுருக்கிவிட்ட ‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் ஒழிக்கப்படவேண்டும்.

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் சந்தித்த தோல்வி காரணமாக தற்கொலை செய்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாநில வளர்ச்சி, தமிழக மாணவர்களின் எதிர்காலம், தமிழக இளைஞர்களின் கனவு போன்றவற்றை சிதைக்கும் ஒரு தேசிய கொள்கை தமிழகத்துக்கு தேவை இல்லை. இந்த கருத்தை அனைத்து தமிழக தலைவர்களும் ஒருமித்த குரலுடன் உரைத்தால் தான் ‘நீட்’ தேர்வுக்காக தற்கொலை செய்யும் மாணவர்களின் துயர நிலை மாறும்.

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதீபாவின் உயிரிழப்புக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசும், விலக்கு பெற்றுத்தர முடியாத தமிழக அரசும் தான் காரணம். பிரதீபா குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பெரவளூர் கிராமத்துக்கு சென்று மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சென்ற ஆண்டு அனிதா என்கிற மாணவி இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 9 தலைவர்கள் கலந்து கொண்டனர்.#CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆகிய 9 கட்சித் தலைவர்களும் தி.மு.க. சேர்ந்த துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், வி.பி. துரைசாமி, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தவிட்டது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை பெறுவதற்கு அரசு தேவையான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.#CauveryIssue #MKStalin
    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    மாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது ஜெயலலிதாவின் அமுத மொழியாகும்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.

    இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்தவித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

    அரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு கல்வி கற்று முன்னேற வேண்டும். தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவ, மாணவிகள் மனம் தளராமல் வர இருக்கின்ற தேர்வில் நன்கு தேர்வு எழுத இப்போதே கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    ×