திருவெண்காடு ஸ்ரீ புதன் பகவான்

புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.
திருவெண்காடு ஸ்ரீ புதன் பகவான்
Published on

சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாக புதன் பிறந்தார். இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து நவகோள்களில் ஒன்றான கிரகபதவியை அடைந்தார். நான்கு குதிரைகள் கொண்ட தேரினை உடையவர். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவர். சுக்கிரனுக்கு மேல் இரண்டு லட்சம் யோசனை தூரத்தில் இருக்கிறவர்.

சூரியனை சுற்றிவரும் முதல் கிரகம் புதனாகும். புதன் சூரியனுக்கு 5 கோடியே 79 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

24 மணிக்கணக்கில் தன்னைத்தானே ஒரு தரம் சுற்றிக் கொண்டும் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 9500 மைல், குறுக்களவு 3000 மைல் என்றும் கூறுவர்.

சந்திரன் புதனுடன் திருவெண்காடு அடைந்து சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், இக்சயதுரோகத்தையும் நீங்கப் பெற்றான்.இத்தலத்தில் புதனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.

சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு புதன் பகவானை தரிசித்தால் கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை பெறலாம். கல்விக்கு காரணமாக இவர் விளங்குவதால் வித்யாகாரகன் என்றும் இவரை கூறுவர். வித்தையைத் தரும் இவருடைய சன்னிதி பிரம்மவித்யாம்பிகையின் இடது பாகத்தில் அமைந்திருப்பது பொருத்தமேயாகும்.

மேலும் வித்தைக்கு அதிபதியான பிரம்மனின் சமாதியும் புதன் சன்னதிக்கு தென்பால் அமைந்துள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் கோவிலும், சந்திர தீர்த்தமும் புதன் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளன.

மேலும் அலிக்கிரகமான புதன் ஐந்தாம் இடச்சம்பந்தம் பெறுவதனால் சிலருக்கு குழந்தை பிறக்காது. மேற்படி தோஷம் உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து மூன்று தீர்த்தத்தில் மூழ்கி நீராடி சுவேதாரண்ய பெருமானை வழிபட்ட பின்பு புதனை வழிபட்டால் குழந்தை பேற்றினை பெறலாம்.

புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். இத்தகைய குறைகளையும் இத்தலத்துக்கு சென்று வழிபட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இங்கே புதபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். மகிமை வாய்ந்தவர் என்பது கண்கூடு. புத பகவான் வெண்காட்டு ஈசனாரை நோக்கி தவம் செய்து தன் அலிதோஷம் நீங்கி ஒன்பது கிரகங்களில் ஒன்றானார் என்பது வரலாறு. இவர் செய்த தவத்தின் காரணமாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிகாரியானார் என்கிறது அபிதான சிந்தாமணி எனும் நூல்.

புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.புதன் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், பண்டிதர்களாகவும் இருப்பர். செய்யும் தொழில் மேன்மை அடையவும், பேச்சுத்திறன், கணிதம், தர்க்கம், கலை ஆகியவற்றில் சிறப்பு மிக்கவராகவும் விளங்க முடியும். அரசியல் மேன்மை, வைத்தியத்தில் நிபுணத்துவம், இசை, நாட்டியம், பண்மொழிகளில் புலமை புத்திரப்பேறு முதலியவை புதபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.

உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். புதனுக்கு பன்னிரண்டு ராசிகளில் மிதுனமும் கன்னியும் சொந்த வீடு. கன்னிராசியை உச்ச வீடாகவும், மிதுனம் நீச வீடாகவும் அமையப்பெற்றவர்.

இங்கே இவருக்குப் பதினேழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புதபகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திரதோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com