கோவில்களில் மீண்டும் தொடங்கியது அன்னதானம்: பக்தர்கள் மகிழ்ச்சி

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் அந்த 3 நாட்கள் அன்னதானம் பொட்டலங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என தஞ்சை அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு தெரிவித்தார்.
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் நேற்று தொடங்கியதை படத்தில் காணலாம்.
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் நேற்று தொடங்கியதை படத்தில் காணலாம்.
Published on

தமிழகத்தில் பக்தர்களின் வசதிக்காக கடந்த 2011-ம் ஆண்டு கோவில்களில் அன்னதான திட்டத்தை தமிழகஅரசு அறிமுகப்படுத்தியது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மதியம் கோவிலில் இலைபோட்டு சாப்பிட்டு வந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கோவில்கள் மூடப்பட்டன.

அதன்பிறகு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவில்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டன. ஆனாலும் இலைபோட்டு சாப்பிடும் அன்னதானம் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்சல் மூலம் சாம்பார் சாதம், தக்காளி சாதம் என ஏதாவது ஒரு வகை சாதம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் பொதுமக்களுக்கு கோவில்களில் இலைபோட்டு அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை இணை ஆணையர் கட்டுபாட்டில் வரும் 20 கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கரந்தை கோடியம்மன்கோவில், தஞ்சை கொங்கனேஸ்வரர் கோவில், ராஜகோபாலசாமி கோவில், பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் முல்லைவனநாதசாமி கோவில், பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில், கரம்பயம் முத்துமாரியம்மன்கோவில், பருத்தியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோவில், திங்களூர்(சந்திரன் தலம்) கைலாசநாதர் கோவில், பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவில், திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், சூரக்கோட்டை பரமநாதசாமி கோவில், பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்கசாமி கோவில், பட்டுக்கோட்டை நாடியம்மன்கோவில், வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோவில், வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்கோவில், வல்லம் ஏகவுரியம்மன் கோவில், கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோவில், தஞ்சை மேலவீதி பங்காருகாமாட்சியம்மன் கோவில் என 20 கோவில்களில் பக்தர்களுக்கு இலைபோட்டு சாம்பார், ரசம், மோர், 2 வகையான கூட்டுகளுடன் சாப்பாடு பரிமாறப்பட்டது.

17 மாதங்களுக்கு பிறகு அன்னதானம் சாப்பிட்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் அந்த 3 நாட்கள் அன்னதானம் பொட்டலங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என தஞ்சை அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com