ஆலத்தியூர் அனுமன் கோவில் - கேரளா

தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.
ஆலத்தியூர் அனுமன் கோவில் - கேரளா
Published on

தல வரலாறு:

‘ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை இருக்குமிடத்தைக் கண்டறிந்து வரத் தகுதியுடையவர் அனுமனே’ என்று முடிவு செய்தார் ராமர். அவர் அனு மனிடம், சீதையைக் கண்டறிவதற்காக, அவரது உருவ அடையாளங்களைத் தெரிவித்து, ராமன் அனுப்பி வைத்த தூதுவனே என்பதைச் சீதைக்குத் தெரிவிக்கும் அடையாளமாகத் தன் கணையாழியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்தார்.

சீதைக்கு அனுமன் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த, சில தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார். அனுமனும் ராமன் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார். ராமன், சீதை ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட நிகழ்வுகளைத் தான் தெரிந்து கொள்வது தவறு எனும் எண்ணத்துடன் லட்சுமணன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்வு நடைபெற்ற இடமாகக் கருதப்படும் இடத்தில், வசிஷ்ட முனிவர், அனுமனின் சிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி இக்கோவிலை நிறுவியதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு :

இக்கோவிலில் இருக்கும் கருவறையில் ராமபிரான் சீதை இல்லாமல் தனித்து வீற்றிருக்கிறார். அதனை அடுத்துள்ள சன்னிதியில், ராமன், தனக்கும் சீதைக்கும் இடையிலான நிகழ்வுகளைச் சொல்வதை இடதுபுறம் காதைச் சாய்த்துக் கேட்பது போன்ற தோற்றத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டுமென்பதற்காக, இங்கிருந்து சிறிது தள்ளியிருக்கும் சன்னிதியில் லட்சுமணன் தனியாக இருக்கிறார்.

இக்கோவில் வளாகத்தில், கணபதி, ஐயப்பன், துர்க்கா பகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ராமர், லட்சுமணன், அனுமன் என்று மூன்று பேருக்குமான கோவிலாக இந்த ஆலயம் இருந்த போதிலும், இது ‘அனுமன் கோவில்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள அனுமனுக்கு நெய் பாயசம், அவல், ஒட்டப்பம், கதலிப்பழம், வெல்ல அவல், பனப்பாயசம், சாத்துசாதம் போன்றவைகளைப் படைத்தும், அனுமனுக்குரியதாகக் கருதப்படும் பல்வேறு மலர்களைச் சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

இங்குள்ள ராமசாமி கோவிலில் தினமும் பஞ்சாட்சர பாயசம் படைத்து வழிபாடு நடத்தப் பெறுகிறது. இதே போன்று பாகவதசேவை வழிபாடும் செய்யப்படுகிறது. லட்சுமணசுவாமி சன்னிதியில் கும்பம் (மாசி) மாதத்தில் வரும் கோவில் நிறுவப்பட்ட நாளில் தந்திரி தட்சினா, கேளி, சிறுமேளம் எனும் பெயர்களிலான சிறப்பு வழி பாடுகள் செய்யப்படுகின்றன.

அனுமனுக்கு அவல் நைவேத்தியம்

மலையாள நாட்காட்டியின்படி, துலாம் (ஐப்பசி) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் அனுமனுக்கான பெரும்விழா மிகச்சிறப்பாக நடத்தப்பெறுகிறது. இதே போன்று, மீனம் (பங்குனி) மாதம் அஸ்தம் நட்சத்திர நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் அமாவாசை நாள் ஆகியவற்றிலும் அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அவல் வழிபாடு :

சீதையைத் தேடிச் செல்லும் அனுமன் பயணத்தின் இடைவெளியில் உண்பதற்காக, ராமன் அவருக்கு அவல் கொடுத்து அனுப்பினார். அதனை நினைவூட்டும் வகையில், இக்கோவிலில் அனுமனுக்கு ஈரமான அவல் படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு நாழி, கால் பொதி (25 நாழி), அரைப்பொதி (50 நாழி), ஒரு பொதி (100 நாழி) எனும் அளவுகளில் பக்தர்கள் அனுமனுக்கு அவல் படைத்து வழிபாடு செய்கின்றனர். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

சீதையைக் கண்டறியச் சென்ற அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாண்டிக் குதித்ததை நினைவூட்டும் வகையில் கோவில் வளாகத்தில் கல்லில் கட்டிய திடல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்தக் கல் திடலைத் தாண்டிக் குதித்தால், அவர்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களது வாழ்நாள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் அனுமனுக்கு, ராமன் சீதையைக் கண்டறிந்து வருவதற்காகச் சீதையின் உருவ அடையாளங்களையும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் சொல்லிய போது, தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அனுமனின் பலத்தையும் சக்தியையும் அதிகரிக்கத் தங்களது சக்தியினை அவருக்கு வழங்கினர். எனவே, இங்கிருக்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்கின்றனர்.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அமைவிடம் :

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com