

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரில் அமைந்துள்ள சனா சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீது ஏமன் ராணுவம் தாக்கியுள்ளது.
ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஹவுதி அரசாங்கம் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
கடந்த 2014 இல் ஏமன் தலைநகரமான சானாவை ஹவுதிக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதனால் அங்கிருந்து துரதியடிக்கப்பட்ட அரசின் தலைமை, தெற்கு துறைமுக நகரமான ஏடனுக்கு மாறியது.
ஏமன் அரசின் ராணுவம் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை கைப்பற்றுவதில் உள்நாட்டு போர் இருந்து வருகிறது.
ஈரான் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஹவுதிக்கள் ஈரானுக்கு ஆதரவாகவும் ஏமன் அரசு எதிராகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஈரானிய விமானத்தை தடுப்பதற்காக ஏமன் அரசுப் படைகள் அதன் ஓடுதளத்தின் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளன.
இந்தத் தாக்குதலால் சனா விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கின.
இதனையடுத்து, அந்த ஈரானிய விமானம் செங்கடலின் மேற்கு கடற்கரையில் உள்ள அல் ஹுதைதா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு, அங்குப் பத்திரமாக தரையிறங்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சனாவைப் போலவே அல் ஹுதைதா பகுதியும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
சனா விமான நிலையம் மீதான தாக்குதலை ஏமன் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் சனா விமான நிலையம் மீதான தாக்குதல் சவூதி அரேபிய ராணுவத்தால் நடத்தப்பட்டது என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.