

வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் ஃபூ குவொக் தீவு. இந்தப் பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள் 4 பேர் ஆகியோரை ஏற்றிச்சென்ற சுற்றுலா படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் இதுகுறித்து தகவலறிந்து உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது.
விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மீட்புக்குழு அதிகாரிகளும், கடலோர காவல் படையினரும் அங்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
வியட்நாம் படகு விபத்தில் சிக்கி 8 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.
சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா நிறுவனம் சிலரை சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
வியட்நாமில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 15 இந்தியர்களின் உயிர் பறிபோக காரணமான படகின் கேப்டன் 57 வயதான நுயென் ஹாங் ஹாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், அன் ஜியாங் மாகாணம் துவான் தியென் கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.