இங்கிலாந்தில் வினோதம்: நதியைத் திருமணம் செய்துகொண்ட பெண்... 3 ஆண்டுகளாகத் தொடரும் விந்தையான 'பாசம்'!

"நதிக்கும் எனக்குமான காதல் இன்னும் ஆழமாகத் தொடர்கிறது.'
Meg Avon England
Published on

இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மேக் என்ற பெண், அங்குள்ள 'ஏவோன்' என்ற நதியைத் திருமணம் செய்துகொண்டு, தற்போது தனது 3-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ள வினோத சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நதிக்கும் தனக்கும் உள்ள காதல் இன்னும் குறையவில்லை என்று கூறி, அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணம் நடந்தது எப்போது?:

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் 'மேகன் ரூத்-ட்ரம்ப்'. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 17 அன்று, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடை அணிந்து, 'ஏவோன்' நதியைத் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை 'மேக் ஏவோன்' என்றும் மாற்றிக் கொண்டார்.

விசித்திரமான காதலும், 'டேட்'டும் :

அண்மையில் தனது 3-வது திருமண நாளைக் கொண்டாடிய மேக், "நதிக்கும் எனக்குமான காதல் இன்னும் ஆழமாகத் தொடர்கிறது. கடுமையான குளிர்காலத்திலும் கூட வாரத்திற்கு ஒருமுறை நான் என் நதியுடன் நேரம் செலவிட (குளிக்க) தவறுவதில்லை" எனத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது ஏதோ வேடிக்கைக்காகவோ அல்லது மனநலக் குறைபாட்டாலோ செய்யப்பட்ட திருமணம் அல்ல. இங்கிலாந்தின் நீர்நிலைகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கலக்கப்படும் 'கழிவுநீர் மற்றும் நச்சு மாசு' குறித்த விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த வினோத போராட்ட வடிவத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.

சட்டப்பூர்வ அங்கீகாரம்:

தற்போதைய சட்டப்படி ஒரு நதியை மனிதர்கள் முறைப்படி திருமணம் செய்ய முடியாது. எனவே, 'ரைட்ஸ் ஆஃப் நேச்சர்' அமைப்புகளுடன் இணைந்து, "நதிகளுக்கு மனிதர்களைப் போன்ற சட்டப்பூர்வ வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகிறார். இந்த உரிமை கிடைத்தால், நதியைத் தான் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, மேகன் கூறுகையில், "நாம் அனைவரும் திருமணம், சட்டம் மற்றும் காதல் ஆகியவற்றைப் புரிந்து கொள்கிறோம். ஆனால், இயற்கையை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிறோம். இந்த நதி ஒரு பொருளல்ல, அது நமக்குப் உயிர் கொடுக்கும் ஒரு வாழும் ஜீவன். அது மாசடைந்து அழிவதைத் தடுக்கவே நான் அதற்கு மனைவியாக மாறினேன்.

எங்களின் இந்த விசித்திரக் கதை கடினமான சுற்றுச்சூழல் சட்டங்களை சாமானிய மக்களுக்கும் எளிதாகப் புரிய வைக்கிறது" என மேக் ஏவோன் தெரிவித்துள்ளார். மேக் ஏவோனின் இந்த வினோத நதித் திருமணம் மற்றும் நீர் மாசுக்கு எதிரான போராட்டம் தற்போது ‘Rave On for the Avon’ என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com