தைவான் விவகாரம்... சீனாவில் உள்ள தூதரகத்தை மூடியது லிதுவேனியா

சீன அரசு லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன், அந்த நாட்டின் தூதரை வெளியேற்றியதால் இருநாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டது.
லிதுவேனிய தூதரகம்
லிதுவேனிய தூதரகம்
Published on

வில்னியஸ்:

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த சீன அரசாங்கம், தைவானை அமைதி வழியில் இணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தைவான் அதனை ஏற்காமல், தாங்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என உறுதிபட தெரிவித்து வருகிறது. எனவே, தைவானுடன் எந்த நாடாவது உறவு வைத்துக் கொண்டால் அந்த நாட்டுக்கு பல்வேறு விதங்களில் நெருக்கடி கொடுத்து வருகிறது சீனா.

இந்நிலையில், தைவானுக்கு மறைமுகமாக தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் வகையில், தைவானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்கள் நாட்டில் திறக்க லிதுவேனியா அனுமதித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்தது. லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன், அந்த நாட்டின் தூதரையும் சீனா வெளியேற்றியது. இதன் காரணமாக இருநாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த விவகாரம் முற்றியதையடுத்து லிதுவேனியா அரசு, பீஜிங்கில் உள்ள தங்கள் நாட்டு தூதரக ஊழியர்களை படிப்படியாக வெளியேற்றியது. இன்று கடைசி அதிகாரியும் வெளியேற்றப்பட்டதையடுத்து, தூதரகம் மூடப்பட்டது. 

இதுதொடர்பாக லிதுவேனிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனாவில் தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூதரக செயல்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதேபோல், லிதுவேனியாவில் சீன தூதர்களின் அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பான சீனாவின் முடிவு நிலுவையில் உள்ளது. 

சீனாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடரவும், பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாடு எட்டப்பட்டவுடன் தூதரகத்தின் செயல்பாடுகளை முழுமையாக மீட்டெடுக்கவும் லிதுவேனியா தயாராக உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com