

அமெரிக்க ராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அதிபர் டிரம்ப் இன்று மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் மிக மோசமான கட்டத்தை எட்டி வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், தற்போது முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
ஹார்முஸ் மற்றும் ஈரானின் தெற்குக் கடற்கரையோரம் உள்ள ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணை நிலைகள் மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நான்காவது நாட்களாகத் தாக்குதல்களை நடத்தியது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார். ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம் என அமெரிக்க அதிபர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், “அடுத்த மூன்று நாட்களுக்கு அமெரிக்க ராணுவம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறது.
அடுத்த வாரம் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது. ஏனென்றால், அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும்.
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், பாலங்களையும் தகர்த்துவிடுவோம்” என்று அவர் கூறினார்.