

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் பயணித்தார். அப்போது இவர் அருகில் இருந்து ஜன்னல் மீது ஏதோ ஒன்று வேகமாக மோதி, ஜன்னல் உடைத்துள்ளது. பின்னர் காற்றழுத்தம் காரணமாக அவரை விமானத்திற்கு வெளியே தள்ளியுள்ளது. ஆனால், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவரை காற்றால் வெளியே இழுத்துச் செல்ல முடியவில்ல. அவரது தோள்பட்ட மற்றும் தலை ஏறக்குறைய வெளியே சென்றுள்ளது. ஆனால், அருகில் இருந்து பயணிகள் அவரை உள்ளே இழுத்ததால் உயிர் பிழைத்துள்ளார்.
டயர் வெடிப்பது போன்ற சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு தாங்கள் விழித்துக்கொண்டதாகவும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட பயணியின் தலையும் தோள்களும் ஜன்னலுக்கு வெளியே இருப்பதை கண்டதாகவும் பயணிகள் கூறினர்.
"எங்களில் பெரும்பாலோர் தூங்கிக்கொண்டிருந்தோம், கண்களை மூடியிருந்தோம். அப்போது டயர் வெடிப்பது போன்ற ஒரு சத்தம் கேட்டது," என்று சக பயணி ஒருவர் அதிர்ச்சி கலந்த குரலில் தெரிவித்துள்ளார்.
"விமானத்தின் காற்றழுத்தம் குறைந்துவிட்டதை (decompression) நாங்கள் உடனடியாக உணர்ந்தோம். அலறல் சத்தங்கள் கேட்டன. யாரோ தவறுதலாக அவசரக்காலக் கதவைத் திறந்துவிட்டார்களோ என்று ஒரு கணம் நான் நினைத்தேன்," என்று பெண் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் இயந்திரம் ஒன்றிலிருந்து கழன்று விழுந்த உதிரிபாகம் ஒன்று மோதியதாலேயே அந்த ஜன்னல் உடைந்திருந்தது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
'ரயன்ஏர்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பயணியின் ஜன்னல் கழன்று விழுந்ததால், அது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியது. பயணிகள் முனையத்திற்குத் திரும்பினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.