

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் நான்கு விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர்.
நாசாவின் விண்வெளி ஏவுதல் அமைப்பின் மீது பயணித்த ஓரியன் விண்கலம், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் பயணிக்கும் நாசாவின் முதல் நிலவுப் பயணமான ஆர்டெமிஸ்-II திட்டத்திற்கு ரீட் வைஸ்மேன் தலைமை தாங்குகிறார். நிலவின் மறுபக்கத்திற்குச் சென்று திரும்பும் முதல் பெண், முதல் கறுப்பினத்தவர், மற்றும் முதல் கனடிய விண்வெளி வீரர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க குழுவை இத்திட்டம் சுமந்து செல்கிறது.
கடைசி நிமிடத்தில் ராக்கெட்டை பின்னோக்கி இழுத்தது மற்றும் ஹீலியம் கசிவுகள் போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்பச் சீரமைப்புகள் உள்ளிட்ட தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு இந்த ஏவுதல் நிகழ்ந்துள்ளது. இது, மனிதர்களை மீண்டும் புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் அனுப்புவதில் உள்ள சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
இதுவரை உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டுகளில் ஒன்றான ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS), இந்திய நேரப்படி அதிகாலை 3:54 மணிக்கு, கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஓரியன் விண்கலத்திற்குள் பாதுகாப்பாக இருந்த நான்கு விண்வெளி வீரர்களுடன் வானில் சீறிப் பாய்ந்தது.