

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி என்னை விவாதத்திற்கு அழைத்தால் செல்ல தயார்.
* அரசு திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன்.
* அரசின் திட்டங்களுக்கு பெயர் வைப்பது தொடர்பாக விமர்சனம் எழத்தான் செய்யும்.
* திட்டங்களுக்கு யார் பெயரை வைக்க வேண்டுமோ அதைத்தான் வைக்க வேண்டும்.
அரசின் திட்டங்கள் குறித்து நேரடி விவாதம் நடத்த முதலமைச்சர் வருவாரா என இபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.