

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வேட்பு மனுத்தக்கல் மற்றும் தேர்தல் பரப்புரை என பம்பரமாக சுழன்று வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 02) திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து திருச்சியில் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் வழக்கு பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அதனை தொடர்ந்து நடைபெற்ற பரப்புரை விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. இரண்டாவது வழக்கு கடந்த ஆகஸ்ட் 2025-ஆம் ஆண்டு மதுரை மாநாட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பானது ஆகும்.