கூடலூர் அருகே 2 பேர் பலி- டிரோன், கும்கி யானைகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி தீவிரம்

டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
காட்டு யானைகளை விரட்ட வரவழைக்கப்பட்ட 2 கும்கி யானைகள்.
காட்டு யானைகளை விரட்ட வரவழைக்கப்பட்ட 2 கும்கி யானைகள்.
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்த டீக்கடைக்காரர் ஆனந்தகுமார்(வயது43). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் யானை தாக்கி இறந்தார்.

இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து யானையை விரட்ட முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஓவேலி அடுத்த பாரம் பகுதியை சேர்ந்த மாலு என்ற மும்தாஜ் யானை தாக்கி உயிரிழந்தார்.

ஆனால் அவரை தாக்கியதும், ஆனந்தகுமாரை தாக்கியதும் ஒரே யானையா அல்லது வேறு யானையா என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

தொடர்ந்து 3 நாட்களில் யானை தாக்கி 2 பேர் இறந்ததால் மக்களும் அச்சம் அடைந்து, உடனே இங்கு சுற்றி திரியக்கூடிய காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து நேற்று கூடுதலாக முதுமலையில் இருந்து சங்கர், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது.

4 கும்கி யானைகள் உதவியுடன் பாரம், 4-ம் நெம்பர் உள்பட பல்வேறு இடங்களில் வனத்துறையினர் காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல கூடாது. மேலும் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை நடவு செய்யக்கூடாது. வீடுகளின் அருகே பலா மரங்கள் இருந்தால், அதில் விளைந்துள்ள காய்கள், பழங்களை அகற்ற வேண்டும். பலா பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com