நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலையில் போலீசார் மெத்தனம்: ஆர்.பி.உதயகுமார்

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலையில் போலீசார் மெத்தனம்: ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை:

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.

அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.

ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com