பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தற்போது பரவி வரும் வைரசின் வீரியம் குறைவு தான். எனவே, பாதிப்பு இருக்காது.தினசரி சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள மருந்து பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்ட காட்சி.
மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள மருந்து பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்ட காட்சி.
Published on

சென்னை:

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதுகாப்பு ஒத்திகையை பார்வையிட்ட பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இந்த ஒத்திகை நடைபெறும்.

தமிழகத்தில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. 329 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களும் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீடுகளிலேயே சிகிச்சை பெறுகிறார்கள்.

தற்போது பரவி வரும் வைரசின் வீரியம் குறைவு தான். எனவே, பாதிப்பு இருக்காது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

இருப்பினும் முன்எச்சரிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 64 ஆயிரத்து 281 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 33 ஆயிரத்து 664 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை ஆகும்.

ஆக்சிஜனை பொறுத்தவரை 2 ஆயிரத்து 67 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதி உள்ளது. 2-வது அலையின் போது 500 மெட்ரிக் டன் சேமிக்கும் வசதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் வசதி அரசில் 78 இடங்களிலும் தனியாரிடம் 264 இடங்களிலும் உள்ளன.

தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுகிறது. தினசரி சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இனி 11 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com