மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து மாயம்- சென்னை புறப்பட்டு சென்ற மாடலிங் பெண்ணை பிடிக்க தீவிர வேட்டை

கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து மாயம்- சென்னை புறப்பட்டு சென்ற மாடலிங் பெண்ணை பிடிக்க தீவிர வேட்டை
Published on

மண்டபம்:

இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்த 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங் குளத்தை சேர்ந்த பிரதீப் (வயது32), அவரது மனைவி கஸ்தூரி ஆகியோர் தங்களது 2 கைக்குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அதன் பின் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இதற்காக வாய்ப்புகளை தேடி சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். இது தொடர்பாக போலீசிலும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.அகதிகளாக வந்தவர்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி கஸ்தூரி வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாடலிங் பணிக்காக சென்னை செல்வதாக கணவர் பிரதீப் பிடம் கஸ்தூரி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் கணவரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப் சென்னை சென்று கஸ்தூரி கொடுத்த முகவரியில் விசாரித்துள்ளார். அப்போது மனைவி கொடுத்த முகவரி தவறானது என தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பிரதீப் தனது மனைவி மாயமானது குறித்து மண்டபம் போலீசில்புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கஸ்தூரி மாடலிங்கிற்காக யாரை தொடர்பு கொண்டார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று போலீசார் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கஸ்தூரி மாயமானது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com