3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ராமேசுவரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ராமேசுவரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.

இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள் 10 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அத்துடன் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் மீனவ சங்க பிரநிதிகள் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரனை சந்தித்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், 6-ந்தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com