கூட்டத்திற்கு வந்த தொண்டர் பலி- தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. தொண்டர் ஆரோக்கியசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
உயிரிழந்த ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு நிதியுதவி
உயிரிழந்த ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு நிதியுதவி
Published on

செம்பட்டி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் அரசு விழாவில் கலந்துகொண்டு பின்னர் நேற்று மாலை திண்டுக்கல்லுக்கு சாலை மார்க்கமாக சென்றார். வழிநெடுகிலும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிலக்கோட்டை அருகே குல்லலக்குண்டு ஊராட்சி கல்லடிப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது60). கூலித்தொழிலாளியான இவர் தீவிர தி.மு.க. தொண்டர்.

இவருக்கு ஆரோக்கிய மேரி என்ற மனைவியும், அருள்ராஜ், ஸ்டாலின் என்ற மகன்களும் ஞானசவுந்தரி என்ற மகளும் உள்ளனர். செம்பட்டியில் முதல்-அமைச்சரை வரவேற்க ஆரோக்கியசாமி சென்றார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபின்னர் தொண்டர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உயிரிழந்த ஆரோக்கியசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி ரூ.5 லட்சம் வழங்க அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆரோக்கியசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அப்போது மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், மணிகண்டன், திண்டுக்கல் நகர செயலாளர், துணைமேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com