

தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக மின் வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கூறுகையில், “மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக மீட்டர் கணக்கீடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்க்ளுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மின் விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை, பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை.
இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால், பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.
மேலும் கால முறைப்படி முறையான ஆய்வு மேற்கொள்ள, மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.
மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை, இனிவரும் காலங்களில் அடிக்கடி களஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.