என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இதனால் தான் முதலமைச்சராக முன்வந்தேன்... ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தம் குறித்து பேசிய சசிகலா
- ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தான் முதலமைச்சர் ஆக முன்வந்தது குறித்து சசிகலா பேசினார்.
சசிகலா பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டம்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அவர் மீது குறைகூற ஒன்றும் இல்லை. அவர் ஒழுங்காகத்தான் செயல்பட்டார். சில நாட்களில் ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து என்னிடம், அவர் சரியில்லை என்றார்கள். அதற்கு நான். நன்றாகதானே செயல்படுகிறார் என்று கூறினேன்.
நீங்கள் இப்போதே பொதுச்செயலாளராக வேண்டும் எனவும். முதலமைச்சர் ஆக வேண்டும் எனவும் என்னிடம் கூறினார்கள். காலையிலும், மாலையிலும் நடந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி, என்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அனைவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
அவர் நல்ல அதிகாரி இல்லை என்றும், ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டவர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உடனே நான், ஜெயலலிதா சரியில்லை என ஒதுக்கியவரை எப்படி நியமிக்க முடியும்? இது எல்லாம் முதலமைச்சர் மீது ஒரு குறையா? என்று சொன்னேன். இதை இப்படியேவிட்டால் பிரச்சனை பெரிதாக ஆகும் என எண்ணி நான் முதலமைச்சர் ஆக முடிவுக்கு வந்தேன். அதற்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் என அமர்ந்துவிட்டார். அதை யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்றார்.






