என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை... இ.பி.எஸ். மீது சசிகலா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
- என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
- தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சசிகலா பேசியதாவது:-
என் மீதான வழக்கில் தீர்ப்பு வந்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை. அப்போது என் கவனம் எல்லாம் அரசை கலைக்க விட்டு விடக்கூடாது என்ற பொறுப்பு அதிகமாகிவிட்டது. ஒரு வாரம் அவகாசம் கேட்டும் கிடைக்கவில்லை. நாளைக்கு மாலை 6 மணிக்கு பெங்களூரு சிறைக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே எம்.எல்.ஏ.க்களை கூட்டி ஒருவரை முதலமைச்சராக (எடப்பாடி பழனிசாமி) தேர்ந்தெடுத்தோம். நான் அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை. அவர் உடனே என்ன சொன்னார்? நீங்களே எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கி கொடுங்க என்றார். அதையும் செய்தேன். பிறகு பெங்களூரு சென்றேன்.
சில மாதங்கள் சென்றது. நீங்கள் ஏன் பெங்களூருவில் இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் கேட்டனர். தமிழகத்துக்கு மாற்றிடலாம் என்றனர். அதை மறுத்து நான் பேசியது ஏதோ தெய்வாதீனமாக எனக்கு தோன்றியது போல இருக்கிறது. இல்லை என்றால் நான் இன்றைக்கு பேசிக்கொண்டு இருப்பேனா என்பதே கஷ்டம். அதுக்கு அப்புறம் திடீர்னு ஒரு பொதுக்குழு, என்னை நீக்கினார்கள்.
நான் ஒருவரை முதலமைச்சராக உட்கார வைத்து விட்டு சென்றேன். ஆனால் என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
தினமும் எனக்கு பிரச்சனை. இதற்கிடையே எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது பரோலில் 15 நாட்கள் விடுப்பு கேட்டேன். 5 நாட்கள் மட்டும் கொடுங்கள் என இங்கே முதலமைச்சர் கூறினார். போயஸ் கார்டன் வீட்டில் தங்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை எனக்கு விதித்தனர். எனது கணவர் மறைந்த தகவல் வந்தது. அதற்கும் கேட்ட பரோல் கிடைக்கவில்லை.
ஆட்சியில் உட்கார வைத்த என்னை, ஈட்டி வைத்து குத்தியது போல செய்தனர். இதை எல்லாம் மீறி, நான் விடுதலை ஆகி சென்னைக்கு வந்தேன். காரில் கட்சி கொடி கட்டக்கூடாது. ஜெயலலிதா சமாதிக்கு போகக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர். தமிழக எல்லைக்கு வந்தவுடன் என்னை கைது செய்ய காத்திருந்தனர்.
இன்று கட்சி சரிந்து போய்விட்டது. எப்படியாவது ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்து இருந்தால் அப்பவே எதையும் செய்திருக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது. நம்மை கைவிடமாட்டார்கள். அதனால்தான் இந்த மண்ணில் இந்த முடிவை எடுப்பதற்காக வந்தேன். என் மனதில் உள்ளதை எல்லாம் உங்களிடம் சொல்லி விட்டேன். இனி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். புதிய களத்தை காணப்போகிறோம் என்றார்.






