

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்று சில பேருந்துகளின் அறிவிப்பு திரையில் மகளிர் விடியல் பயணத்திற்கு பதில், மகளிர் பயணம் என்று மட்டும் இருந்ததால் இந்த தகவல்கள் பரவியது.
இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.,
“முதலமைச்சர் விஜய் கரூர் செல்லக் கூடாது என எங்குமே திமுக கூறவில்லை. எங்கள் மனுவில் ஒரு வரி, ஒருவார்த்தை கூட அவ்வாறு இல்லை. ஜனநாயக நாட்டில் ஒருவர் விரும்பிய இடத்திற்கு செல்வதை யாராலும் தடுக்கமுடியாது. அவர் கரூருக்கு செல்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
மாற்றத்திற்கான கட்சி என சொல்லிவிட்டு வெறும் பெயர் மாற்றத்திற்கான கட்சியாக ஆட்சிக்கு வந்துள்ளார்கள். திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாதததால் இன்று விவசாயிகள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பலதரப்பட்ட மக்களும் அரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல பெயர் மாற்றத்திற்கான ஆட்சி.
விடியல் பேருந்து பயணத்தில் விடியலை நீக்கி உள்ளனர், நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளனர். இப்போதுள்ள திட்டங்கள் எல்லாம் எங்களுடைய தலைவரால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். அதன் பெயரை மட்டும் மாற்றி இவர்களுடைய திட்டம் போல காட்டிக்கொள்ளாம் என கருதுகிறார்களோ என்னவோ.
மேலும் முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதை திமுக தடுக்கிறது என கூறினார்கள் எங்களுடைய வழக்கில் எங்காவது விஜய் கரூர் செல்ல கூடாது என இருக்கிறதா.? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை வைத்து பேசினார்.
‘காவல்துறையை விட்டு கொன்று குவித்தனர்’ என வீண் பழியை சுமத்தினார். அவர் பேச்சிற்கு எதிராகத் தான் நீதிமன்றம் சென்றோமே தவிர விஜய் கரூருக்கு செல்ல கூடாது என ஒரு வரி, ஒரு வார்த்தை கூட எங்கள் மனுவில் இல்லை.” என தெரிவித்தார்.