

விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததே காரணம் என்றும் இதற்கு பின்னால் அரசியல் காரணம் உள்ளதாகவும் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி அவரது வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், தற்போது 'ஜன நாயகன்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார். ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மெர்சல் படத்தில் தேவையின்றி தலையிட்டு தமிழர்களின் பெருமிதங்களை சிதைக்காதீர்கள் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.