

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மத்தியில் பாஜக வெற்றிப் பெறுவதற்கு காரணம் காங்கிரஸ்தான் என, தவெகவிற்கு தாவியதை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“என்னது !! “பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?” அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல கொள்கையினை மாற்றிக்கொள்ளும் இயக்கங்கள் காரணமா?
1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது யார்? 2002 கோத்ரா கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோதும்
வாய் திறக்காமல் அதே கூட்டணியில் தொடர்ந்தது அதிகாரத்தை அனுபவித்தது யார்?
அது கொள்கை அரசியலா? அல்லது அதிகாரத்திற்கான பசியா? அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.
ஆனால் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல.
மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம். கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்…
ஆனால் மக்கள் நினைவில் நிற்பது அரசியல் நாகரிகமும், வரலாறும் தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.