

கேரளம் மாநிலம் மறையூர் அருகே நீண்ட தந்தத்தை கொண்ட படையப்பா என அழைக்கப்படும் ஒற்றை யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது இந்த யானை சாலையில் நின்று அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து வருகிறது. சமீபத்தில் இந்த யானை கார் மற்றும் பேருந்தை தாக்க முயன்றது வைரலானது.
இந்நிலையில் உடுமலையில் இருந்து மூணாறு நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் பயணிகள் ஏராளமானோர் இருந்தனர். மறையூர் அருகே சென்ற போது படையப்பா யானை சாலையில் நின்றது. பேருந்தை கண்டதும் தலையை ஆட்டிய படி பேருந்தை நோக்கி யானை முன்னேறி வந்தது.
ஓட்டுனர் பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானை பேருந்தை நோக்கி வந்து விட்டது. உள்ளே இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பஸ்சில் இருந்த சில பயணிகள் 'சாமியே சரணம் ஐயப்பா', 'ஐயப்பா காப்பாத்து' திரும்பி போயிருப்பா எனக் கூறினர். சிறிது நேரத்தில் படையப்பா யானை சாலையிலிருந்து இறங்கி வனப்பகுதிக்கு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.