

பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது 2 முறை முதலமைச்சராக அவரால் அமர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் முதலமைச்சரானார்.
பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடினர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் கடந்த 50 வருடங்களாக அவரது காரில் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. வண்ணமான கருப்பு, வெள்ளை, சிவப்பு வரையப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்ததை தொடர்ந்து காட்சிகள் மாறியுள்ளன. அந்த வண்ணம் தி.மு.க. கட்சி கொடியான கருப்பு, சிவப்பு வண்ணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது நுழைவு வாயில் கிரில் கேட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அறுத்து எடுக்கப்பட்டது. மேலும் அங்கு உதயசூரியன் சின்னம் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட உள்ளது.
தி.மு.க.வில் அவர் இணைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வின் சுவடே இல்லாமல் ஓ.பி.எஸ். இல்லம் மாறியுள்ளது. அவர் தி.மு.க.வில் இணைந்தது கடைகோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை எந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்த்த தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். தன்னை 3 முறை முதலமைச்சராக்கிய அ.தி.மு.க.விற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்து விட்டதாக தொண்டர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது என வேதனையுடன் புலம்பினர்.