என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது- நயினார் நாகேந்திரன்
- சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தை மலை மீது ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னது போல வாமா மின்னல் என வந்த வேகத்தில் போய்விடும்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர் இதுவரை கைது செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது. பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதாவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டி.டி.வி தினகரன் சொல்லி வந்ததாக கேட்கிறீர்கள். பா.ஜ.க., அ.தி.மு.க 2 கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.
எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். பலமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. தி.மு.க.விற்கு எதிராக பலமான போட்டி இல்லை என முதலமைச்சர் சொல்லி வருகிறார். அதனை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.






