TN Assembly Election | நெல்லையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
TN Assembly Election | நெல்லையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Published on

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்கட்ட பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கி திருச்சியில் முடித்தார்.

தொடர்ந்து 2-ம் கட்ட பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இருந்து இன்று தொடங்குகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார்.

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

தி.மு.க. வேட்பாளர்களான அப்துல் வகாப் எம்.எல்.ஏ. (பாளையங்கோட்டை), சுப்பிரமணியன் (நெல்லை), சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்) காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, அம்பை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் ஆகியோர் செய்துள்ளனர்.

கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார். இரவில் அங்கு தங்கும் அவர் மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் நெல்லைக்கு வருகிறார். வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய உணவுக்கு பிறகு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களான மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ராஜா எம்.எல்.ஏ. (வாசுதேவநல்லூர்), கலை கதிரவன் (தென்காசி), கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் (கடையநல்லூர்), சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரத்திற்காக செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துலுக்கர் பட்டி ராம்கோ சிமெண்ட்ஸ் விருந்தினர் இல்லத்தில் இரவு தங்குகிறார்.

மறுநாள்(5-ந் தேதி) காலை விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com