என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பரிசு ரகசியம்- திடீரென்று அறிவிப்போம்: அமைச்சர் ரகுபதி
- திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது.
- அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் டி.டி.வி.தினகரனையோ, ஓ.பி.எஸ்.சையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா? இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ்கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ் நாட்டின் அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால் நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.
சாக்கு போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இருமுனைப் போட்டி என்பதை முன் வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும்.
மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உடன் சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியும்.
செவிலியர் போராட்டம் உள்ளிட்டவைகளால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட்-2 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க.வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது.
அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. அனைவரும் தி.மு.க.வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க.வை சொல்லித்தான் பேச முடியும். தி.மு.க.தான் எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான் தி.மு.க.வை சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக்குழுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு என்றார்.






