

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்துறையில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தற்போது எந்த உறுதியும் அளிக்க முடியாது. முதலில் எத்தனை ஒப்பந்த பணியாளர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் பிறகு முடிவெடிக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் பத்திர பதிவுத்துறையில் முறைகேடு நடந்துள்ளது. முந்தைய அமைச்சரின் காலத்தில் ஊழல் மலிந்திருந்தது. பழனி போலி பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற மோசடி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கோவில் நிலங்கள் மட்டுமல்லாமல், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து போலி பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கலாம். போலி பத்திரப்பதிவு மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பத்திரப்பதிவுத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. அதிக புகார்கள் வருவதால் இதற்கென தனிப்பிரிவு அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசிக்கப்படும்.
போலி பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் வழங்கினால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.