

சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, திருத்தணி, ஓசூர், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது. பங்குனி மாதம் தொடங்கியது முதலே சுபமுகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் அதிக அளவில் இல்லாததால் பூ விற்பனை மந்தமாகவே நடந்து வந்தது. இதனால் கடந்த வாரம் வரை சாமந்தி மற்றும் ரோஜாப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து சாமந்திபூ விலை திடீரென இரண்டு மடங்காக அதிகரித்தது. ரகத்தை பொறுத்து ஓரு கிலோ சாமந்திபூ ரூ.120 முதல் ரூ.160வரை விற்பனை ஆகிறது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.30 முதல் ரூ.50வரை விற்கப்பட்ட ரோஜாப்பூ தற்போது கிலோ ரூ.120ஆக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மல்லி ரூ.400 வரையும்,பன்னீர் ரோஜா- ரூ.50 முதல் -ரூ.100 வரை, சாக்லேட் ரோஜா- ரூ.70 முதல் -ரூ.120வரை, கனகாம்பரம் மற்றும் முல்லை- ரூ.400, அரளி- ரூ.300, சாமந்தி- ரூ.120முதல் -ரூ.160வரை விற்பனை செய்யப்படுகிறது.