

காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 3 வாரங்களாக ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன. இதனால் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் பிரியர்கள் அதிகாலையிலேயே தேவையான மீன்களை வாங்குவதற்கு காசிமேட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வரத்து குறைவினால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
கடந்த வாரம் போலவே இந்த வாரமும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளும் குறைவாகவே காணப்பட்டன.
பெரிய வகை மீன்களின் விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய வகை மீன்களையே மீன் பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.
வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால், ஷீலா, தேங்காய் பாறை, பால் சுறா, கொடுவா உள்ளிட்ட மீன் வகைகள் இருந்தும் விலை ஏற்றத்தின் காரணமாக மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விசைப் படகுகளில் இருந்து இறக்கப்படும் மீன்களை உணவகங்களுக்கு வாங்கி செல்வதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் மார்க்கெட்களுக்கு மீன்களை வாங்கி செல்பவர்கள் கூடை கூடையாக சிறிய வகை மீன்களையே வாங்கி செல்கின்றனர்.
வஞ்சிரம்- 1100
கொடுவா- 900
தேங்காய் பாறை -800
ஷீலா- 800
பால் சுறா- 800
சங்கரா- 500
பாறை- 400
இறால்-400
நண்டு -300
நவரை -300
பண்ணா-300
காணங்கத்தை -300
கடுமா- 300
நெத்திலி-200.