திருமண நிச்சயதார்த்தத்துக்கு மணப்பெண்ணை சைக்கிளில் ஊர்வலமாக அழைத்து வந்த மாப்பிள்ளை

விலை உயர்ந்த கார்களில் மண்டபத்திற்கு செல்லும் புதுமண ஜோடிகள் மத்தியில் சைக்கிளில் வித்தியாசமாக சென்றது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.பல்லக்கில் அமரவைத்து மண்டபத்தின் உள்ளே திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடிய படியே தூக்கி சென்றதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
திருமண நிச்சயதார்த்தத்துக்கு மணப்பெண்ணை சைக்கிளில் ஊர்வலமாக அழைத்து வந்த மாப்பிள்ளை
Published on

காஞ்சிபுரம்:

திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தற்போது சினிமா திரைப்பட காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெறுகிறது. இந்த வீடியோ காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனால் அதிக செலவுகள் செய்து பிரமாண்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் மணப்பெண்ணை சைக்கிளில் முன்னால் அமர வைத்து புதுமாப்பிள்ளை ஊர்வலக அழைத்து வந்த ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும், யோகலட்சுமிக்கும் திருமண நிச்சயதார்த்த விழா காஞ்சிபுரம் அடுத்து ஓரிக்கையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக மண்டபத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலில் இருந்து மணப்பெண் யோகலட்சுமியை சைக்கிளின் முன்னால் அமர வைத்து புதுமாப்பிள்ளை மனோஜ் ஊர்வலமாக ஓட்டி வந்தார். அவர்களை பின்தொடர்ந்து உறவினர்கள் உற்சாக குரல் எழுப்பினர். விலை உயர்ந்த கார்களில் மண்டபத்திற்கு செல்லும் புதுமண ஜோடிகள் மத்தியில் சைக்கிளில் வித்தியாசமாக சென்றது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதற்கிடையே திருமண மண்டபவாசலுக்கு வந்ததும் யோகலட்சுமியை அவரது சகோதரர்கள் 4 பேரும் பல்லக்கில் அமரவைத்து மண்டபத்தின் உள்ளே திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடிய படியே தூக்கி சென்றதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com