

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர்.
வருகிற 6-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் இன்றும், 6-ந் தேதியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இதைத் தொடர்ந்து இன்றும் வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளான 6-ந்தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தான் போட்டியிடும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அன்றைய தினம் காலையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவும் தனது வேட்புமனுவை 6-ந்தேதி தாக்கல் செய்கிறார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் அவர் அன்று காலை 11 மணியளவில் விருத்தாசலத்தில் கடலூர் ரோட்டில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஷ்ணு பிரியாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.