

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 2-ம் கட்டமாக நெல்லையில் இருந்தும், 3-ம் கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை தொடங்கி முடித்தார் .
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்குகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு பிரசாரம் மற்றும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறும் திலகர் திடலுக்கு வருகிறார்.
இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி தஞ்சை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வந்து தங்குகிறார் . நாளை மாலை (சனிக்கிழமை) 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பின்னர் அந்த பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.