'உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்'- தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சு

எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும்நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்
'உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்'- தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சு
Published on

கோவை தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதன் முறையாக ஏழை மாணவர்கள் நீட் மூலமாக தான் அரசு மருத்துவமனைக்கு படிக்க செல்கின்றனர். திமுக 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வந்தது 5 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 17 அரசு மருத்துவக்கல்லூரி தான். ஆனால் நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்.

கிராமப்புறத்தில் ஒரு ஒரு ஏழை மாணவன் நீட் தேர்வினால் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏழைமாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் தான் படிக்க முடியும்.

நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள். மாணவர்கள் யாரேனும் தற்கொலை செய்தால் முதல்வர் ஸ்டாலின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள். அதற்கு மேல் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com