search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் தொடங்கும்- கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா?
    X

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் தொடங்கும்- கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா?

    • தமிழக சட்டசபையின் கூட்டம் 5-ந்தேதிக்கு பிறகுதான் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.
    • கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து விட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டு தோறும் கவர்னர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்குவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த மாதம் 3-வது வாரம் சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ள காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.

    ஏனென்றால் பொங்கல் பண்டிகை 14, 15, 16, 17-ந்தேதிகள் வருகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் 21-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு 26-ந்தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். அன்றைய தினம் திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

    அதன்பிறகு 28-ந்தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளார். பிப்ரவரி மாதம் 3-ந்தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என தெரிகிறது.

    இதன் காரணமாக தமிழக சட்டசபையின் கூட்டம் 5-ந்தேதிக்கு பிறகுதான் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. சென்னை திரும்பியதும் சட்டசபை கூட்டத்தை நடத்த சட்டபேரவைச் செயலகம் திட்டமிட்டுள்ளது.


    ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி கவர்னர் உரையுடன் சட்ட சபை கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்க வில்லை. சிலவரிகளை தவிர்த்து விட்டார். அது மட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார்.

    இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறவில்லை.

    இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறி விட்டார். இதன்பிறகு கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து விட்டது.

    இந்த சூழலில் இந்த ஆண்டும் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு படிக்க சம்மதிப்பாரா? அல்லது தேவையற்ற வரிகளை நீக்கச் சொல்வாரா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

    அந்த மாதிரி சூழல் ஏற்படும் பட்சத்தில் கவர்னரை அழைக்காமல் சட்டசபை கூட்டத்தை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது

    Next Story
    ×